கம்பஹாவில் கோர விபத்து; தாய், மகள் உட்பட மூவர் பலி!

கம்பஹா மாவட்டம், மீகஹவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்கொட பகுதியில் நேற்று ஓட்டோவும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7 வயது சிறுமி, அவரது தாய் உட்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

புதிய கண்டி வீதியில் பியகமையிலிருந்து தெல்கொட நோக்கிப் பயணித்த ஓட்டோ வலது புறமாகத் திரும்ப முற்பட்டபோது, எதிரே வந்த காருடன் மோதி இந்தக் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த ஓட்டோவின் சாரதி, இரு பெண்கள் மற்றும் இரு சிறுவர்கள் உடனடியாக உடுப்பில பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இவர்களில் ஓட்டோவின் சாரதி, 7 வயது சிறுமி மற்றும் அந்தச் சிறுமியின் தாயார் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த ஓட்டோவின் சாரதி 69 வயதுடைய தெல்கொட பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். மேலும், உயிரிழந்த 39 வயது பெண் மற்றும் அவரது 7 வயது மகள் ஆகியோர் சியம்பலாப்ப பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காரில் பயணித்த சிறுமி ஒருவரும் காயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்தச் சம்பவம் குறித்து மீகஹவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.