சட்டத்தரணிகள் சங்கம் இன்று நாடாளுமன்றத்துக்கு வருகை தராதமைக்கு அரசின் அச்சுறுத்தலே காரணம் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பகிரங்கக் குற்றச்சாட்டு.

அரசின் அச்சுறுத்தல் பாணியிலான கருத்துத் தெரிவிப்புக்கள் காரணமாகவே இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று நாடாளுமன்றத்துக்கு வருகை தரவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் மற்றும் உயர்நீதிமன்றங்களுக்கு நீதியரசர்களை நியமிக்காமை தொடர்பில் விடயங்களை முன்வைப்பதற்காக, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பான சகல கடித ஆவணங்களையும் ஹன்சாட் பதிவுகளில் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் இன்று சபையில் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் இதற்கு முன்னர் சபாநாயகருக்கும் சபை முதல்வருக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும், ஊடகங்கள் வாயிலாகத் தவறான பிரசாரங்கள் கொண்டு செல்லப்பட்டன என்றும் அவர் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் இது தனது தனிப்பட்ட அழைப்பு அல்ல என்றும், தான் ஓர் இணைப்பாளராகவே செயற்பட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.

சபாநாயகர் ஊடாக நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் இதில் பங்கேற்க வேண்டும் என்றே தான் வலியுறுத்தினார் என்றும், இதனை வேறு விதமாகத் தவறாகச் சித்தரித்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரச தரப்பினரின் நிலைப்பாடு குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“நேற்று நாடாளுமன்றத்தில் அரசைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தலான தொனியிலேயே உரையாற்றினர். அரசமைப்பின் ஊடாக கருத்துத் தெரிவிக்கும் பேச்சுச் சுதந்திரம் இந்த நாட்டில் இல்லையா எனக் கேட்கின்றேன். அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தை எந்தவொரு நபராலும் கட்டுப்படுத்த முடியாது.” – என்றார்.

சட்டத்தரணிகள் சங்கம் வேறொரு நாளைக் கோரியுள்ள வேளையில், அரசுக்குச் சார்பான ஊடகங்கள், சட்டத்தரணிகள் சங்கம் அதனை நிராகரித்துள்ளது என்று தவறான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவரைப் போன்றே சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் ஒரு பிரஜையாவார் என்றும், பிரஜைகளைச் சமமாக நடத்துவது அரசமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.