ஐபோனுக்கு தவணை கட்டும் விவகாரத்தால் ஒரு குடும்பமே பலியான பயங்கரம்
ஐபோனுக்கு தவணை கட்டும் விவகாரத்தால் ஒரு குடும்பமே பலியான பயங்கரம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள சத்ரபதி சாம்பாஜிநகர் என்னுமிடத்தில் தன் பெற்றோருடன் வாழ்ந்துவந்த குணால் (18) என்னும் இளைஞர் ஐபோன் ஒன்றை வாங்கியுள்ளார்.
ஒரு குடும்பமே மாண்ட பயங்கரம்
தான் வாங்கிய ஐபோனுக்கு மாதந்தோறும் தவணை செலுத்த பணம் கொடுக்குமாறு தன் குடும்பத்தினரை கேட்டுள்ளார் குணால்.
அதனால் சமீபத்தில் வீட்டில் வாக்குவாதம் உருவாகியுள்ளது. கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய குணால், அருகிலுள்ள மலை ஒன்றின் உச்சியில் ஏறியுள்ளார்.
அவரைப் பின்தொடர்ந்த அவரது தந்தையான முரளிதரும், தாய் சங்கீதாவும், கிராம மக்களும், மலையிலிருந்து கீழே இறங்கி வருமாறு குணாலை கெஞ்சியுள்ளனர்.
அவரோ, வரமாட்டேன் என அடம்பிடித்ததுடன், தான் சாகவிரும்புவதாகக் கூறியுள்ளார். சுமார் மூன்று மணி நேரமாக பலர் அவரிடம் பல விதத்தில் கீழே இறங்குமாறு கோரியும் காலை 10.00 மணிக்கு மலையில் ஏறியவர் மதியம் 1.00 மணி வரை அடம்பிடித்துக்கொண்டிருக்க, அவரது தந்தை அவரைக் கீழே வருமாறு கையைப் பிடித்து இழுத்துள்ளார்.
ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை, குணாலும் அவரது தந்தையான முரளிதரும் மலை உச்சியின் மறுபக்கம் இருந்த பள்ளத்தில் விழுந்துவிட்டார்கள்.
கணவரும் மகனும் பள்ளத்தில் விழுந்ததைக் கண்ட சங்கீதாவும் பள்ளத்தில் குதித்ததாகக் கூறப்படுகிறது. மூன்று பேருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்கள்.
இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஏராளமான மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள நிலையில், இந்த பயங்கர சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
