இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப். 11 இல் பருத்தித்துறையில் போராட்டம்! – நகர பிதா பகிரங்க அழைப்பு.

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி, எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதி பருத்தித்துறையில் நகர சபையின் ஏற்பாட்டில் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

இந்தப் போராட்டத்தில் அரசியல் மற்றும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினரும் பங்கேற்குமாறு பருத்தித்துறை நகர பிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

பருத்தித்துறை நகரசபையின் 15ஆவது அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை நகர பிதா தலைமையில் இடம்பெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அழைப்பை விடுத்தார்.

பருத்தித்துறை துறைமுகச் சந்ததியிலிருந்து செப்டெம்பர் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும் இந்தப் பேரணி, பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை சென்று நிறைவடையும்.

பருத்தித்துறை நகரத்தின் அபிவிருத்திக்குத் தடையாகவும், நகரத்தின் புராதன சின்னங்கள் மற்றும் இடங்களை ஆக்கிரமித்தும் உள்ள இராணுவ முகாம்களை உடனடியாக அகற்றக் கோரி இந்த இரண்டாவது கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

அரசியல் மற்றும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து அரசியல் தரப்பினர், வர்த்தகர்கள், மரக்கறி மற்றும் மீன் வியாபாரிகள், கடற்றொழில் சங்கங்கள் மற்றும் பொது/சமூக மட்ட அமைப்புகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு நகரபிதா கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தப் போராட்டத்துக்குப் பருத்தித்துறைநகர சபையில் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களைத் தவிர, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தேசியக் கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் சுயேச்சைக் குழு (ஊசி) ஆகியவை முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.