வடக்கு மாகாண கல்வித்துறைச் சவால்கள்: ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்.

வடக்கு மாகாணத்தில் கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் காலதாமதமடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, கடந்த கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து முதலில் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் காலதாமதமடைவதால் ஏற்படும் சவால்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றம் காணப்பட்டாலும், எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு முன்னேற்றத்தை எட்ட முடியாத நிலை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டதுடன், இதற்குத் தீர்வாக தனியான விசாரணைக் குழு உறுப்பினர்களை உருவாக்கும் யோசனையும் முன்வைக்கப்பட்டது.

ஆசிரியர் மற்றும் அதிபர் இடமாற்றக் கொள்கை தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. மாகாணங்களுக்கு இடையிலான இடமாற்றங்கள் மற்றும் பாடமாற்றங்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.

அதேவேளை, வலயங்களுக்கு இடையிலான இடமாற்றங்கள் வெளிப்படைத்தன்மையுடனும் நியாயமான நடைமுறையுடனும் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

உரிய காலத்தில் ஓய்வூதியங்கள் வழங்குவதற்கு ஏதுவாக, ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஆசிரியர்களுக்கு ஆபத்துக் கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றமை மற்றும் கஷ;ட, அதிகஷ;டப் பிரதேசங்களிலிருந்து சில பாடசாலைகள் நீக்கப்பட்டமை தொடர்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளமை குறித்தும் கலந்துரையாடப்பட்டது. ஆசிரியர்களின் சம்பள உயர்வுடன் தொடர்புடைய மேலதிக கோரிக்கைகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

வடக்கு மாகாணத்தில் 19 பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளர்களிடம் யோசனைகள் கோரப்பட்டுள்ளமை குறித்தும் ஆராயப்பட்டது. மேலும், கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்ததைப் போன்று வலய மற்றும் மாகாண மட்டங்களில் வருடாந்த நாட்காட்டியைத் தயாரிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. பரீட்சைகள் மற்றும் போட்டிகள் ஒரே நாளில் அமையாத வகையில் கல்வி நடவடிக்கைகளை முறையாகத் திட்டமிடுவதற்கு இந்நாட்காட்டி உதவும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கோட்டக் கல்விப் பணிப்பாளர் நியமனங்களில் எழுந்துள்ள சவால்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

வடக்கு மாகாணத்தின் கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு நடைமுறைத் தீர்வுகளை வழங்குவதற்காக அனைத்து தரப்பினரும் தொடர்ச்சியான கலந்துரையாடல்களின் ஊடாக இணைந்து செயற்பட வேண்டும் எனவும், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சேவை நலன்களுடன் மாணவர்களின் கல்வி நலனும் சம அளவில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் பொதுச் செயலாளரும் பிரதி அமைச்சருமான மஹிந்த ஜயசிங்க, இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் உப தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ம.ஜெகதீஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், வடக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் கந்தையா பிரட்லி ஜெனட் மற்றும் வடக்கு மாகாணத்தின் அனைத்து கல்வி வலயங்களினதும் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.