தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை.
இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தேசியக் கொடி குறித்து நான் கூறியதாக ஒரு குழுவினர் முற்றுமுழுதான பொய்ப் பிரசாரத்தைத் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர். இனங்களுக்கிடையே சீர்குலைவையும் தீவிர இனவாத மோதல்களையும் தூண்டுவதையே நோக்கமாகக் கொண்டு இந்தச் சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சிறப்பு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இத்தகைய பொய்ப் பதிவுகளைத் தெரிந்தே சமூக ஊடகங்களில் பகிர்ந்தவர்கள் அல்லது பதிவேற்றியவர்கள் பற்றிய விவரங்கள், காணொளிகள் மற்றும் பிற ஆதாரங்கள் இருப்பின் அவற்றை உடனடியாக எனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
நாட்டில் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையே மீண்டும் மோதல்கள் ஏற்படுவதைத் தடுப்பதில் அரசு மிகவும் உறுதியாக உள்ளது. எனவே, இதுபோன்ற பொய்ப் பிரசாரங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதனைப் பரப்பியவர்கள் எவராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராகப் பொலிஸார் மூலம் தடையின்றித் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.
