போதைப்பொருள் பயன்பாடு: ஏர் இந்தியா பைலட் பணிநீக்கம்!
ஏர் இந்தியா விமானத்தின் தலைமைப் பைலட் போதைப்பொருள் பரிசோதனையில் தோற்றதைத் தொடர்ந்து, அவரை ஏர் இந்தியா நிறுவனம் உடனடியாகப் பணியிலிருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி தாய்லாந்தின் ஃபூகெட்டிலிருந்து டெல்லி நோக்கி 137 பயணிகள் மற்றும் 8 ஊழியர்களுடன் பயணித்த ஏ-320 ரக விமானம் நடுவானில் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி கீழே சரிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தின் முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியான நிலையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விமான விபத்து புலனாய்வுப் பணியகம் அறிக்கை
விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) வெளியிட்டுள்ள பூர்வாங்க அறிக்கையின்படி, ஆகஸ்ட் 4 அன்று ஒடிசா வான்வெளியில் 36,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த போது, விமானத்தின் மூன்று ஹைட்ராலிக் அமைப்புகளும் (Green, Blue, Yellow Systems) அடுத்தடுத்துச் செயலிழந்தன.
இதனால் தானியங்கி இயக்கம் (Autopilot) துண்டிக்கப்பட்டு, விமானம் சில வினாடிகளில் 372 அடி உயர்ந்து பின்னர் 292 அடி தடாலடியாகக் கீழே சரிந்தது. இதில் இருக்கைப் பட்டை அணியாதிருந்த 20 பயணிகள் மற்றும் 4 விமானப் பணிப்பெண்கள் உட்பட 24 பேர் படுகாயமடைந்தனர்.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரு பைலட்களுக்கும் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் மது அருந்தியதற்கான சான்றுகள் இல்லை.
இருப்பினும், இரத்த மாதிரி பரிசோதனையில் 34 வயதான முதன்மைப் பைலட்டின் மாதிரியில் கஞ்சா (Marijuana) உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருளின் பயன்பாடு உறுதி செய்யப்பட்டது.
இதைத் தீவிரப் பாதுகாப்புக் குறைபாடாகச் சுட்டிக்காட்டிய AAIB, விமானப் போக்குவரத்து தலைமை இயக்ககமான DGCA-வுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்தது.
பரிந்துரையைத் தொடர்ந்து அறிக்கை வெளியான சில மணி நேரங்களிலேயே, “பயணிகளின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்துகொள்ள முடியாது எனக் கூறிப் பைலட்டின் சேவையை ஏர் இந்தியா உடனடியாக முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறால் இந்த அசம்பாவிதம் நேரிட்டதா அல்லது போதையில் இருந்த பைலட்டின் தவறான வழிகாட்டலா என்பது குறித்துத் விரிவான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், இச்சம்பவம் இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
