கடந்த 8 மாதங்களில் வீதி விபத்துகளில் 1,600 இற்கும் மேற்பட்டோர் பரிதாபப் பலி! – விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தகவல்.

டெங்கு நோயைக் காட்டிலும் வீதி விபத்துகளால் நாட்டில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது என்று மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு நேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த எட்டு மாதங்களில் டெங்கு நோயினால் நாட்டில் சுமார் 60 உயிரிழப்புகள் மட்டுமே பதிவாகியுள்ள நிலையில், அதே காலப்பகுதியில் சாலை விபத்துகள் காரணமாக 1,600 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது டெங்கு உயிரிழப்புகளை விட சுமார் 30 மடங்கு அதிகமாகும். மேலும், சராசரியாகத் தினமும் 4 முதல் 5 பேர் வரை வீதி விபத்துகளில் உயிரிழக்கின்றனர்.

இந்த விபத்துகளில் உயிரிழப்போரில் பெரும்பாலானோர் நாட்டின் பொருளாதாரத்துக்கு நேரடியாகப் பங்களிக்கும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த நடுத்தர மற்றும் கிராமப்புற மக்களாவர். குறிப்பாக, ஓட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள், உழவு இயந்திரங்கள் மற்றும் சைக்கிள்களைப் பயன்படுத்துவோரே அதிகளவில் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

குடும்பத்தின் முதன்மை வாழ்வாதாரமாக இருக்கும் தந்தை அல்லது சகோதரன் உயிரிழக்கின்றமையால், அந்தக் குடும்பங்களின் வாழ்வாதாரமும் குழந்தைகளின் கல்வியும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றது.

உயிரிழப்புகள் தவிர்த்து விபத்துகளால் நிரந்தர அல்லது தற்காலிக ஊனத்துக்குள்ளாவோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. இவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்கு அரசு பெருமளவிலான நிதியைச் செலவிட வேண்டியுள்ளது.

தனியார் பஸ்களுக்கு இடையே நிலவும் கடுமையான போட்டி, சாரதிகளின் வீதி ஒழுக்கமின்மை, கவனக்குறைவாகத் திடீரெனத் திரும்பிடும் ‘யூ டர்ன்’ செயற்பாடுகள், பாதைகளில் வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளியைப் பேணாமை மற்றும் முறையான பயிற்சியின்மை ஆகியவையே இத்தகைய விபத்துகளுக்கு முதன்மை காரணமாக அமைகின்றன.

எனவே, சுகாதார அமைச்சு, பொலிஸ் திணைக்களம் மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபைகள் இணைந்து கூட்டுத் திட்டமொன்றை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.” – என்றும் அவர் வலியுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.