81ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வு: இலங்கையின் முன்னுரிமை பற்றி கலந்தாய்வு! – வெளிவிவகார அமைச்சர் – ஐ.நா. பிரதிநிதி சந்திப்பு.

வரும் 81ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வை முன்னிட்டு, இலங்கையின் முன்னுரிமைகள் தொடர்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரெஞ்ச்சை நேற்று திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினார்.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், எதிர்வரும் பொதுச் சபை அமர்வு தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் விரிவாகக் கலந்துரையாடினர்.

இதன்போது, இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான 70 ஆண்டுகளுக்கும் மேலான ஒத்துழைப்பு, ‘ஐ.நா. 80’ முன்முயற்சி, ஐ.நா. நிலையான அபிவிருத்தி ஒத்துழைப்புக் கட்டமைப்பு மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான இலங்கையின் மூன்றாவது தன்னார்வ தேசிய மீளாய்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.

ஐக்கிய நாடுகள் அமைப்புடன் தொடர்ந்து ஆக்கபூர்வமாக ஈடுபடுவதற்கும், பல்தரப்பு ஒத்துழைப்பை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கும் இலங்கை தொடர்ந்தும் உறுதியாகவுள்ளது என்று அமைச்சர் விஜித ஹேரத் இந்தச் சந்திப்பின்போது தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.