அரசின் விரிவான ஜனநாயக அழிப்பு நாட்டின் பொருளாதாரத்தை மிக மோசமாகப் பாதிக்கும் – நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் எச்சரிக்கை.

அரசு விரைவாக ஜனநாயகத்தை அழித்தொழிக்கும் செயற்பாடுகள் நாட்டின் பொருளாதாரத்தை மிக மோசமாகப் பாதிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமர்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“காலையில் நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளைகள் மற்றும் அரசமைப்பின் 121ஆவது பிரிவின் கீழ் கேள்வியொன்றை முன்வைத்த போதிலும், அது தொடர்பாகக் கருத்துக்களை முன்வைக்க எனக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

அரசமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை தொடர்பாகச் சபாநாயகர் தவறான தகவலை வெளியிட்டுள்ளார். துலார குணதிலக்க, சாந்த ஜயதிலக்க உள்ளிட்டோரும் இதற்கு எதிராக மனுத் தாக்கல் செய்திருந்த போதிலும், திறந்த நீதிமன்றத்தில் அழைப்பு விடுக்கப்படாததால் அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன. மனித உரிமைகளை மீறுவதற்காக அல்லாமல், அவற்றைப் பாதுகாப்பதற்காகவே அரசு ஆட்சிக்குக் கொண்டுவரப்பட்டது.

இந்த மனுக்களுக்குச் செவிசாய்க்காமல் மனு நடைமுறை முழுமையடையாது. அதனைப் பூர்த்தி செய்தே 22ஆவது திருத்தம் தொடர்பான அபிப்பிராயத்தை நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.

‘அனைவரின் குரலுக்கும் செவிசாய்க்க வேண்டும்’ என்ற கோட்பாட்டைப் பின்பற்ற வேண்டும். நெடுஞ்சாலைகளை அமைப்பது போல், அரசு அதிவேகமாக ஜனநாயகத்தை அழிக்கும் நிலைக்கு நாட்டைத் தள்ளிவிட்டுள்ளது.

சுதந்திரமான நீதித்துறை மற்றும் நீதிமன்றத்தின் மீது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் நாட்டைவிட்டு வெளியேறிவிடும்.

நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்குச் சர்வதேச நம்பிக்கை அவசியம். அந்த நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்காகப் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்டீபன் திரூ இலங்கைக்கு வருகை தந்திருந்தபோது, நீதி அமைச்சரையும் செயலாளரையும் சந்திப்பதற்கு அனுமதி கோரியிருந்த போதிலும் அது வழங்கப்படவில்லை. பொதுநலவாய நாடுகள் மற்றும் அதன் நடைமுறைகள் குறித்து இந்த அரசுக்கு எந்த அறிவும் இல்லை.

22ஆவது திருத்தம் பரிசீலிக்கப்பட்டபோது அனைத்து மனுக்களுக்கும் செவிசாய்க்கப்படவில்லை. ஒருவர் தனது சொந்த வழக்குக்குத் தானே அமர்ந்து ஆஜராக முடியாது என்பதால், இதற்கு முழுமையான அமர்வு நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். கௌரவமிக்க நீதிமன்றத்துக்கு இழைக்கப்படும் இந்த அவமதிப்புகளை நாம் எதிர்க்கின்றோம்.

மேலும், சுகாதாரம் என்பது ஓர் அடிப்படை உரிமை என்றும், அதனைப் பலப்படுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சியில் இருந்தபோது பிரஸ்தாபித்த தற்போதைய ஜனாதிபதி, இப்போது தமக்குத் தோன்றியபடி மருத்துவமனைக்குச் செல்ல முடியாது என்று கூறுகின்றார். மருந்துகள் மற்றும் உபகரணங்களின் தட்டுப்பாடுகளே இதற்கு முக்கியக் காரணமாகும்.

‘அஸ்வெசும’ நிவாரணம் வெட்டப்படுவதுடன், நெல்லுக்குத் தருவதாகக் கூறிய 150 ரூபாய் உத்தரவாத விலையும் வழங்கப்படவில்லை. மாறாக 120 ரூபாவே வழங்கப்பட்டு விவசாயிகளுக்கு 17 ரூபா நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொய்களைக் கூறிக்கொண்டு நாடு முழுவதும் செல்வதற்குப் பதிலாக, ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.