மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களைப் பாராட்டும் தேசிய நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நிகழ்வு மட்டக்களப்பில் – பிரதமர் ஹரிணி தலைமையில் காசோலைகள் வழங்கி வைப்பு.
மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களைப் பாராட்டும் தேசிய நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நிகழ்வு பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.
ஜனாதிபதி நிதியத்தின் ஏற்பாட்டில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின்இராஜதுரை அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிரதமரால் ஊக்குவிப்பு கொடுப்பனவுக்கான காசோலைகள் வழங்கி வைத்தார்.
இதன்போது 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
மாணவர்களின் கல்வி சாதனைகள் மற்றும் திறமைகளை ஊக்குவிப்பதுடன், சமூகத்தில் அவர்களுக்கான சம வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும் ஜனாதிபதி செயலகத்தின் செயற்பாடுகளை பிரதேச மட்டத்தில் சிறப்பாகவும் பன்முகப்படுத்தப்பட்ட வகையிலும் முன்னெடுத்த பிரதேச செயலகங்களைப் பாராட்டும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் சுவாமி நிலமாதவானந்த ஜீ மஹாராஜ், சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்தின, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோசான் கமகே, கிழக்கு மாகாண செயலாளர், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்ட அரச அதிபர்கள், பல்கலைக்கழக உப வேந்தர்கள் என உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி நிதியத்தால் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ உதவிகள், அத்தியாவசிய உபகரணங்கள் வழங்குதல் மற்றும் பல வேலைத்திட்டங்கள் மூலம் நிதியுதவி வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.











