22 ஆவது திருத்தத்துக்கு எதிராக செப். 24 கொழும்பில் ஆர்ப்பாட்டம் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அறிவிப்பு.
அரசமைப்பின் 22 ஆவது திருத்தத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டி, அமைதி வழியிலான ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இதற்காக அனைத்து முற்போக்கு மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசு ஜனநாயகத்தையும், நீதிமன்றத்தின் சுதந்திரத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் சீரழித்து வருகின்றது. 22 ஆவது திருத்தத்துக்கு எதிராக முதன்முதலில் ஐக்கிய மக்கள் சக்தியே குரல் கொடுத்தது. எதிர்காலத்தில் இதற்கு எதிரான நடவடிக்கைகளையும் முன்னெடுப்புகளையும் ஜனநாயக ரீதியில் மேலும் வலுப்படுத்துவோம்.
தற்போது நாடு பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இந்த 22 ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனநாயகத்தை அழித்து, தனிக்கட்சி ஆட்சியைக் கொண்டுவந்து, நாட்டின் அதிகாரத்தைப் பெலவத்தைக்குக் கொண்டு செல்லும் முயற்சியைத் தோற்கடிக்க வேண்டும்.
மக்களை ஏமாற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டனர். நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்கள் தேசிய மக்கள் சக்திக்கு உண்டு என்பதற்காக, 220 இலட்சம் மக்களின் உரிமைகளை நசுக்க இடமளிக்க முடியாது. இதற்கு எதிராகப் பெரும் மக்கள் பலத்தைத் திரட்டுவோம்.
பிரஜைகளுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் எதிராகக் கொண்டுவரப்படும் இந்த மோசமான 22 ஆவது திருத்தத்தைத் தோற்கடிப்பதற்கான பெரும் நடவடிக்கை எடுக்கப்படும். இது அரசின் மாற்றத்துக்கு வழிவகுக்கும்.
அரசின் சர்வாதிகார ஆட்சியைத் தோற்கடிக்கும் முதல் அடியைச் எதிர்வரும் செப்டெம்பர் 24 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி பதிக்கும்.” – என்றார்.
