யானைத்தாக்கத்தைத் தடுக்குமுகமாக எல்லைப்பகுதிகளில் யானைவேலி அமைக்கும் பணி.

கஞ்சிகுடிச்சாற்றில் 45கிலோமீற்றர் நீளமான யானைவேலி !

திருக்கோவில் பிராந்தியத்தில் யானைத்தாக்கத்தைத் தடுக்குமுகமாக எல்லைப்பகுதிகளில் 45கிலோமீற்றர் நீளமான யானைவேலி அமைக்கப்பட்டுவருகிறது.

நேற்று கஞ்சிக்குடிச்சாறு பிரதேசத்தில் யானை வேலி அமைக்கும் பணி ஆரம்பித்துவைக்கப்பட்டது.

அச்சமயம் திருக்கோவில் பிரதேசசெயலாளர் தங்கையா கஜேந்திரன் திருக்கோவில் பிரதேசசபைத்தவிசாளர் இ.வி.கமலராஜன் உதவி பிரதேச செயலாளர் கந்தவனம் சதிசேகரன் மாவட்ட எம். இல்யாஸ் வனபரிபாலன உத்தியோகத்தர் வனஜீவராசிகள் திணைக்கள திருக்கோவில் பிரதேசபொறுப்பதிகாரி எஸ்.பிரசாந்தன் காணி போதனாசிரியர் கே.மகேஸ்வரராஜா மற்றும் அமைப்பு பிரதிநிதிகள் சமுகமளித்திருந்தனர்.

இவ்வேலி வனப்பகுதிக்கூடாகச் செல்வதால் துறைசார்ந்த அதிகாரிகளையும் அழைத்து கலந்துரையாடி இப்பணி முன்னெடுக்கப்படுகிறது.

திருக்கோவில் பிராந்தியத்தில் இதுவரை 30கிலோமீற்றர் நீளமான யானைவேலி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கஞ்சிக்குடிச்சாறு தொடக்கம் ருபஸ் குளம் வரையிலான 15கிலோமீற்றர் நீளமான யானைவேலி அமைக்கப்படவுள்ளது.

திருக்கோவில் பிரதேசம் அடிக்கடி யானைத்தாக்குதலுக்குள்ளாகிவருவதும் அடிக்கடி மனித உயிர்கள் பலியாவதும் பயிர்பச்சைகள் உடமைகள் சேதமாவதும் தெரிந்ததே.

இந்த 45கிலோமீற்றர் நீளமான யானைவேலி அமைக்கப்பட்டால் யானையின் தாக்கத்தை கட்டுப்படுத்தமுடியுமென பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.