இ.தொ.கா ஆதரவு குடும்பத்தில் நான்கு வாக்குகள் இருந்தால் இரண்டை எமக்கு தாருங்கள் – இராதாகிருஷ்ணன்

மலையகத்தில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டுமெனில் தொலைபேசி சின்னத்துக்கு வாக்களித்து சஜித் பிரேமதாசவை பிரதமராக்குவதற்கு மலையக மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவருமான முன்னாள் அமைச்சர் இராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.

ஹற்றன் வெலிஓயா பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

தமிழ், முஸ்லிம் வாக்குகள் தேவையில்லை. அதற்காக அவர்களிடம் கையேந்தமாட்டோம் என விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார். அதாவது தமிழ் மக்களே தங்களிடம் கையேந்த வேண்டும் என்பதே அவரின் நினைப்பாக உள்ளது.

வீடமைப்பு அமைச்சு பதவியை வகித்த விமல் வீரவன்ஸ, மலையகத்தில் வீடுகளை கட்டவில்லை. இனியும் அவர் அமைச்சரானால் எமது பகுதிகளில் வீடுகளை நிர்மாணிக்கமாட்டார்.

இந்நிலைமை மாறவேண்டுமானால் தொலைபேசி சின்னத்துக்கு வாக்களித்து சஜித்தை பிரதமராக்குவதற்கு எமது மக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மலையக கட்சிகளை விமர்சிப்பதற்கு நான் இங்கு வரவில்லை. எமக்குத் தேவையான விடயங்களை எடுத்துரைக்கவே வந்துள்ளேன். வாக்கு என்பது உங்கள் உரிமை. அதனை எங்களுக்கு தாருங்கள் என பலவந்தமாகக் கேட்கமுடியாது.

ஆனால், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்களின் குடும்பத்தில் நால்வர் இருந்தால் இரண்டு வாக்குகளை அவர்களுக்கும், இரண்டை எங்களுக்கும் வழங்கலாம். இது கோரிக்கை மாத்திரமே என்றார்.

Comments are closed.