தற்கொலைத் தாக்குதலுக்கு பயிற்சி பெற்றவர்கள் எனக் கூறப்படும் 6 பெண்கள் கைது!

சஹரான் ஹாஷிமின் அடிப்படைவாத போதனைகளில் பங்கேற்று தற்கொலைத் தாக்குதல்கள் உள்ளிட்ட பயிற்சிகளைப் பெற்றதாக கூறப்படும் 06 பெண்களை பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு பொலிஸ் குழுவினர் காத்தான்குடி பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 06 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவித்தன.

இதில், பெண் ஒருவரும் அவரது 03 மகள்மாரும், இரு மருமகள்மாரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் நேற்று கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்துக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்து வரப்பட்டதாக அந்த தகவல்கள் தெரிவித்தன.

அண்மையில், மட்டக்களப்பு விசேட பொலிஸ் குழுவினர், பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையில் 20 வயதான இளைஞர் ஒருவரைக் கைது செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து முன்னெடுத்த சிறப்பு விசாரணைகளில், வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கமைய இந்த ஆறு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஏற்கனவே ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் என தெரிய வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.