மாகாண சபைத் தேர்தலை நடத்த உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள் பிரதமர் மஹிந்த உத்தரவு.

மாகாண சபைத் தேர்தலை நடத்த
உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள்
பிரதமர் மஹிந்த உத்தரவு.

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு  பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும், பிரதமருக்கும் இடையே இன்று முற்பகல் விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் முக்கிய சந்திப்பு நடைபெற்றது. இதன்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பழைய அல்லது புதிய முறைக்கு அமைவாகத் தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் குறித்து ஆராயுமாறும் பிரதமர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.

அதன் காரணமாக இம்முறை மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமைக்கு அமைய நடத்தி, எதிர்காலத்தில் தேவையான சட்டங்கள் உருவாக்கப்பட்டதன் பின்னர் புதிய முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வது எளிதாக அமையும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அதற்குப் பதிலளித்த பிரதமர் ஏற்கனவே அது தொடர்பில் சபாநாயகரிடம் தான் கோரிக்கை விடுத்துள்ளார் என்று குறிப்பிட்டார்.

குறித்த சந்தர்ப்பத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி நிமல் ஜீ. புஞ்சிஹேவா உள்ளிட்ட ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.