இலங்கை – இந்திய மீனவர் பேச்சுக்கு திகதிகள் குறிப்பு

இலங்கை – இந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், இரு நாடுகளுக்கிடையேயான துறைசார் பேச்சுகள் எதிர்வரும் 22 மற்றும் 30ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதுடன், இலங்கையில் தடை செய்யப்பட்ட இழுவை வலைகளைப் பயன்படுத்தி, மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் எனவும், இதனால் கடல் வளங்கள் அழிவடைவதுடன் தமது வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகின்றது எனவும் இலங்கை மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்தநிலையில், கடந்த வருடம் நவம்பர் மாதம் கடற்தொழில் மற்றும் நீர் வள மூலங்கள் அமைச்சராகப் பொறுப்பேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்தவகையில், இலங்கையின் கடல் வளங்கள் மற்றும் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகின்ற அதேவேளை, இந்தியக் கடற்தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை இழக்கக்கூடாது என்ற அடிப்படையிலான புதிய பொறிமுறையில் பேச்சுகள் இடம்பெறவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட கடற்தொழில் அமைச்சர், குறித்த திட்ட வரைபை இந்தியப் பிரதமரிடம் கையளித்திருந்தார்.

குறித்த திட்டம் தொடர்பாக இந்தியத் தரப்பினரால் திருப்தி தெரிவிக்கப்பட்டதுடன், கடந்த 2016, 2018 ஆம் ஆண்டு காலப் பகுதியில் நடைபெற்ற இரு நாடுகளுக்குமிடையிலான பேச்சுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கொரோனாத் தொற்று பரவல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுகள் தாமதமாகி வந்த நிலையில், எதிர்வரும் 22 மற்றும் 30ஆம் திகதிகளில் பேச்சுகள் காணொளி ஊடாக ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.