புளாட் வதை முகாமில் நான் – சீலன் (பகுதி 10)

புளாட் வதை முகாமில் நான் – சீலன் (“வெல்வோம்-அதற்காக” – பகுதி 10)

எம்மில் யாராவது உயிருடன் தப்பித்தால், எமக்கு நடந்ததை மற்றவர்களுக்கு கூறும்படி…
சுத்த இராணுவத்தனமாக முன் கூட்டியே தீர்மானித்த வன்மத்துடன் விசாரணை தொடங்கியது. மாற்று இயங்கங்களுடன் எமக்கு ஏதாவது தொடர்பு இருந்ததா என்ற கோணத்தில் விசாரணைகள் நடந்தது. இதில் பலராலும் நம்ப முடியாத ஒரு விடையம் கூட நடந்தது. வழமையாக கைது செய்யப்படுவோரை சித்திரவதை செய்து விசாரணை நடத்துவதிற்கு பெயர் போன சங்கிலியோ, அல்லது மொட்டை மூர்த்தியோ எம்மை விசாரிக் வரவில்லை. இதற்கு என்ன காரணம் என்று, அன்று எமக்குப் புரியவில்லை.

பின்னாளில் எம்மை முதலில் விசாரித்த மீரான் மாஸ்டரை சந்தித்த போது, இது தொடர்பாக அவரிடம் விசாரித்தேன். அவர் அதற்கு, எமது மகஜர் தொடர்பாக இரண்டுபட்ட கருத்துக்கள் தலைமைக்குள் இருந்ததாகவும். அதில் எந்தக் கருத்தும் நாம் மகஜர் அனுப்பிதை ஆதரிக்கவில்லை என்றும், எவ்வாறு எங்களைத் தண்டிப்பது என்பதில் மட்டுமே இரண்டு வகைக் கருத்துக்கள் நிலவியதாகவும் மீரான் மாஸ்டர் கூறினார். அத்துடன், முதலில் இலகுவான முறையில் விசாரணை நடத்த தலைமை விரும்பியதனால், தன்னை விசாரணைக்கு அனுப்பியதாகவும். இதன் அடிப்படையிலேயே சங்கிலியை உடனடியாக விசாரணையில் ஈடுபடுத்தவில்லை எனவும் கூறினார்.

இதன் பின் எம்மை மீண்டும் வண்டியில் ஏற்றினார்கள். அவ்வண்டியின் பின்புறத்தின் நான்கு மூலையிலும், நான்கு பேர் ஏ.கே 47 துப்பாகியுடன், நாம் தப்பிச் செல்லாது பாதுகாப்பிற்காக நின்றார்கள். வண்டியின் முற்பகுதியில் இருவர் இருந்தனர். அதில் ஒருவர் மாணிக்கதாசன். அவரும் எம்மை ஏ.கே 47 துப்பாகியுடன் காவல் புரிந்த நால்வர் போல பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஒன்றில் பயிற்சி பெற்றவர்தான்.

வாகனத்தில் ஏற்றப்பட்ட எம்மை, நீண்ட நேர ஒட்டத்தின் பின்பு ஒரு முகாமுக்கு கொண்டு சென்றனர். அங்கே எமக்காக அமைக்கப்பட்டிருந்த ஒரு கூடாரத்திற்குள் கொண்டு செல்லப்பட்டோம். அக் கூடாரம் அந்த முகாமில் இருந்து சற்று ஒதுக்குப்புறமாக, அந்த முகாமின் கிணற்றுக்கு அருகில் இருந்தது. இரவுநேரம் என்பதால் முகாம் அமைதியாகவே இருந்தது. அங்கே தான் தோழர் தங்கராஜாவும், கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை அறிந்தோம். தோழர் தங்கராஜாவையும் சேர்த்தால் தற்போது நாம் பத்துப்பேர். எல்லோரும் அந்த கொட்டிலுக்குள் சென்றதும், ஒருவரோடு ஒருவர் கதைக்ககூடாது என்றனர். அப்படி கதைத்தால் கடும் தண்டனை கிடைக்கும் என மாணிக்கதாசன் மிரட்டினான். வெளியே கொட்டிலைச் சுற்றி பாதுகாப்புக் கடமையில் நின்றவர்களிடம், இவங்கள் ஏதாவது தங்களுக்குள் கதைத்தால் தனக்கோ அல்லது முகாம் பொறுப்பாளருக்கோ உடனே கூறும்படியும் கட்டளையிட்டான். அத்துடன் காவலுக்கு நின்றவர்களையும் எம்முடன் கதைக்கக்கூடாதென்று அறிவுறுத்தினான். மீறினால், கடும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவீர்கள் என்றும் அவர்களிடம் கூறிவிட்டு, வண்டியில் ஏறிச் சென்றான். நாம் அந்த கூடாரத்துக்குள், அதன் மண் தரையில் உறங்க முற்பட்டோம். ஆனால் முடியவில்லை. காரணம் பயம் எங்கள் அனைவரையும் ஆட்கொண்டிருந்தது.

மறுநாள் காலை முகம் கழுவுவதற்காக கிணற்றுக்கு வந்தவர்கள், எங்களை விசித்திரமாக பார்த்தார்கள். அவர்களின் பார்வையில் எம்மீது ஒரு கோபம், ஏளனம் தெரிந்தது. ஆரம்பத்தில் அவர்களின் அந்தப் பார்வை ஏனென்று எமக்குப் புரியவில்லை. ஒருசில கிழமைகளில் நாம் அதைப் புரிந்துகொண்டோம். எம்முடன் கதைக்க முயன்ற சிலர் எம்மைப் பார்த்து கேட்டனர்,

“நீங்கள் எமது இயக்கத்தை அழிக்க முயற்சித்தவர்கள் தானே…? இயக்கத்தை பிளவுபடுத்த வந்தவர்களா நீங்கள்…?” என கேட்டனர். அவ்வாறு தான் அந்த முகாமில் எம்மை பற்றி பிரச்சாரம் செய்திருந்தனர். அமைப்பின் தவறைச் சுட்டிக் காட்டியவர்களுக்கு கொடுக்கப்பட்ட பெயர், அமைப்பை உடைக்கவும் அழிக்கவும் வந்தவர்கள் என்பதுதான்.

நாம் மலம் கழிக்கவோ அல்லது சிறுநீர் கழிக்கப் போனாலும், எம்முடன் நால்வர் பாதுகாப்பிற்கு வருவார்கள். அதுவும் ஒருவர் மட்டும் தான் போகவேண்டும். போகும்போது முன்னால் இருவர், பின்னால் இருவர் வருவார்கள். எமக்கு பாதுகாவலர்களாக வருபவர்களுக்கு கட்டளை, நாம் மலம் கழிப்பதற்கு சென்றால், நாம் மலம் கழிக்கும் போது எமக்கு மிக அருகாமையில் காவல் புரியும்படி. ஆதலால் அவர்கள் எமக்கு அருகாமையிலேயே எப்போதும் நிற்பார்கள். அப்போது அத்தோழர்களை பார்க்கும் போது எனக்கு மிகவும் சங்கடமாகவிருக்கும்.

எமக்கான உணவைத் தரும்போது கூட அவர்கள் ஒரு வெறுப்புடனேயே தந்தார்கள். அன்று பகல் முழுவதும் எம்மை எவரும் சந்திக்க வரவில்லை. இந்த இடைவெளியில் எமக்கிடையே அமைதியான சம்பாசனைகள் நடந்தன. தோழர் தங்கராஜா தனது உயிருக்கும், எமது உயிருக்கும் ஏதாவது ஆபத்து நடக்கலாம் என்ற ஐயத்தினை வெளிப்படுத்தினார். எம்மில் யாராவது உயிருடன் தப்பித்தால், எமக்கு நடந்ததை மற்றவர்களுக்கு கூறும்படியும், உறவினர்களுக்கு அறியப்படுத்தும் படியும் தெரிவித்தார். அதன் அடிப்படையில் எம்முடைய முழு விபரங்களையும் (உண்மையான பெயர், ஊர்) என்பவற்றை எல்லாம் எமக்குள்ளேயே பரிமாறிக் கொண்டோம். அப்போது அந்த முகாமின் பொறுப்பாளராக இருந்தவர் வளவன். அவர் தேனீ முகாமில் பயிற்சி பெற்றவர். இந்த வளவன் சில வருடங்களின் பின், இந்தியன் ஆமி இலங்கையில் புலிகளுடன் யுத்தம் செய்த போது, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தபடி இந்தியன் ஆமிக்கு எதிராக போரிட்டவர்.

பின்னாளில் வளவனைப் பற்றி நான் விசாரித்ததில், அவர் புலியின் உளவாளி என்றும், அக்கடமையை செய்வதற்காகவே கழகத்தில் இணைந்தார் என்றும் கூறப்பட்டது. அத்துடன் நான் அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பில் இலங்கையில் வேலை செய்ததை நான் நேராகக் கண்டேன். ஏற்கனவே ஒரு இயக்கத்தில் இருந்தவர்களை, புலி உடனடியாக முக்கிய பொறுப்பில் அமர்த்தாது என்பதை வைத்து பார்க்கும்போது, வளவன் ஒரு புலி உளவாளி என நானும் நம்புகின்றேன்.

ஒரு அமைப்பின் தவறை, அதன் கட்டமைப்பிற்குள்ளேயே நேர்மையான வழியில் சுட்டிக் காட்டப் புறப்பட்ட நாம் துரோகிகள் ஆக்கப்பட்டோம். ஆனால் உளவு பார்க்க புலிகளால் அனுப்பப்பட்டவன், எல்லோரையும் காக்கா பிடித்து, எல்லோருக்கும் நல்லவனாக நடித்த உண்மையான துரோகி, நல்லவனாகவும் அமைப்பிற்கு விசுவாசியாகவும் அமைப்பின் தலைமையால் கருதப்பட்டான்.

அன்று இரவும் எவரும் எம்மை சந்திக்க வரவில்லை. மறுநாள் பகல் முழுவதும் எவரும் சந்திக்க வரவில்லை.

தொடரும்

– சீலன்

பழைய பதிவுகளை காண அழுத்துங்கள்

Leave A Reply

Your email address will not be published.