இனப்படுகொலைக்கும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கும் சர்வதேச விசாரணை மூலமே நீதி கிடைக்கும்! – சாணக்கியன் எம்.பி. கடிதம்

“தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள தமிழர்களாகிய நாம் அனைவரும் முன்னிற்க வேண்டும். சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்படும்போதே எமக்கு நீதி கிடைப்பது சாத்தியமாகும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்துக்கு அனுப்பிவைத்துள்ள கடித்திலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை முன்னின்று நடாத்திய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மாரில் 71 இற்கும் அதிகமானவர்கள் இறந்து போய் உள்ளதை ஆவணப்படுத்தும் வகையில் வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் நடைபெறும் கையேட்டு நிகழ்வில் தவிர்க்க முடியாத காரணத்தால் என்னால் பங்குபெற முடியாமல் போயுள்ளது.

இருப்பினும், இனி வருகின்ற காலங்களில் ஒரு இளைஞன் என்ற வகையில் பல வருடங்கள் கடந்தாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் வரையில் நான் தளர்வடைய மாட்டேன். இந்தப் போராட்டத்தை நீதி கிடைக்கும் வரையில் எக்கால கட்டத்திலும் கைவிடாது முன்கொண்டு செல்வேன் என்று உறுதியாகக் கூறுகின்றேன்.

பௌத்த – சிங்கள பேரினவாத அரசு நாட்டில் தலைதூக்கியுள்ள நிலையில், எமது நாட்டில் எமக்குரிய நீதி கிடைப்பதென்பது சந்தேகமே. ஆகையால் எமது போராட்டங்களை சர்வதேச பார்வைக்குக் கொண்டு வருவது எமது தலையாய கடமையாகும். எமது பிரச்சினைகள் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள தமிழர்களாகிய நாம் அனைவரும் முன்னிற்க வேண்டும்.

சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்படும்போதே எமக்கு நீதி கிடைப்பது சாத்தியமாகும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கு, எவ்வாறு இருக்கின்றார்கள் என்பது இன்றும் புரியாத புதிராகவே உள்ளது. இதற்குத் தற்போதைய அரசு பதிலளிக்க வேண்டும்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.