மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றுபட்டு வரைபு தயாரிப்பு.மூவர் அடங்கிய குழுவும் நியமனம்.

3 தமிழ்த் தேசியக் கட்சிகளும்
ஒன்றுபட்டு வரைபு தயாரிப்பு
மூவர் அடங்கிய குழுவும் நியமனம்

எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்திய புதிய பிரேரணையில் இருக்க வேண்டிய முன்மொழிவு வரைபைத் தயாரிப்பது தொடர்பில் மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டை எடுத்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய மூன்று கட்சிகளுக்கிடையில் கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற சந்திப்பிலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மூன்று கட்சிகளும் ஒற்றுமையாக முன்மொழிவு வரைபைத் தயாரிக்க மூவர் அடங்கிய குழுவும் நேற்றைய கூட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் முக்கியஸ்தர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மூவரும் இணைந்து இன்று தொடக்கம் தயாரிக்கும் முன்மொழிவு வரைபை மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகளும் மீண்டும் கூடி ஆய்வு செய்து இறுதி செய்யும்.

அதன்பின்னர் அந்த வரைபை ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளருக்கும்,  ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் அனுப்பிவைப்போம்” – என்றார்.

வரைபிலுள்ள பரிந்துரைகளை இலங்கை அரசுக்குத் தெரியும் வகையில் பகிரங்கப்படுத்துவதில்லை எனவும் நேற்றைய கூட்டத்தில் முடிவு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே புதிய பிரேணைக்கான முன்மொழிவுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான செயற்பாடுகள் கடந்த டிசம்பர் 29ஆம் திகதி கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் இரண்டாம் கட்டச் சந்திப்பு நடைபெற்றிருந்தது.

இந்த இரு சந்திப்புகளிலும் பூரணமான இணக்கம் ஏற்படாத நிலையில் நேற்று கொழும்பில் மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகளின் உறுப்பினர்கள் நேரில் சந்தித்து வரைபைத் தயாரிப்பது தொடர்பில் ஒருமித்த நிலைப்பாட்டை எடுத்துள்ளன.

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தலைமையில் கொழும்பு 03, கொள்ளுப்பிட்டியிலுள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று மாலை 6 தொடக்கம் இரவு 9.30 மணிவரை நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா (தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்) மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம் ஆகியோரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட உறுப்பினர்களும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில் அதன் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் உள்ளிட்ட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.