தீர்வு விடயத்துக்கு இந்தியா முதலிடம்! – ஜனாதிபதி ஊடகப் பிரிவு மூடிமறைப்பு.

தீர்வு விடயத்துக்கு இந்தியா முதலிடம்! – ஜனாதிபதி ஊடகப் பிரிவு மூடிமறைப்பு.
இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை, ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து முக்கிய பேச்சு நடத்தியுள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில் இந்திய வெளிவிவகார அமைச்சர் நேற்றுமுன்தினம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டிருந்தார்.

இந்தநிலையில், நேற்று முற்பகல் ஜெய்சங்கர், ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்துள்ளார்.

மூடிய அறைக்குள் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஜெனிவா விடயம், தமிழர் விவகாரம், அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை அடியொற்றிய மாகாண சபை முறைமை மற்றும் அரசியல் தீர்வு ஆகியன முக்கிய இடம் பிடித்தன என அறியமுடிந்தது. ஆனால், சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த நான்கு விடயங்கள் குறித்தும் எந்தக் கருத்துக்களும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

கொரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சையளிக்க இந்தியா தயாரிக்கும் தடுப்பூசியை ஏனைய நாடுகளுக்கு வழங்கும்போது இலங்கைக்கு முன்னுரிமை அளிக்கத் தயாராக இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தெரிவித்தார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கான எதிர்கால நடவடிக்கை குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, கிச்சையின் அவசியத்தை சரியாக மதிப்பிட்ட பின்னர், இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனாத்  தடுப்பூசியைப் பெற இலங்கை விருப்பத்துடன் உள்ளது எனக் கூறினார்.

தடுப்பூசியை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது இலங்கைக்கு முன்னுரிமை அளிப்பதாக ஜெய்சங்கர் உறுதியளித்தார். பரஸ்பர நன்மைகளை அதிகரிக்க இந்திய – இலங்கை இருதரப்பு உறவை பரஸ்பர நன்மையை பெறும் வகையில் மேம்படுத்த ஜனாதிபதியும் இந்திய வெளிவிவகார அமைச்சரும் இணக்கம் தெரிவித்தனர்.

இந்திய பங்களிப்புடன் இலங்கையில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு மேலதிகமாக, ஒத்துழைப்பு வளர்ச்சியை விரிவுபடுத்தக்கூடிய பல துறைகள் கலந்துரையாடலின்போது அடையாளம் காணப்பட்டன. கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம், எல்.என்.ஜி (திரவ, இயற்கை எரிவாயு) மின் திட்டம், வீடுகள் மற்றும் வீதிகள் அமைத்தல், விவசாய அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் மாற்று மின்சக்தி மூலங்களின் அபிவிருத்தி ஆகியவை இதில் அடங்கும்

முறையான கல்வியைப் பெற்ற இளைஞர்கள் இலங்கையில் உள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த இளைஞர்களுக்கு பல்வேறு துறைகளில் முறையான தொழில் பயிற்சி அளிக்க இந்தியாவின் உதவியை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இலங்கையின் குறிப்பிட்ட தேவைகள் தெரிவிக்கப்படும்போது தொழில் பயிற்சி திட்டங்களுக்கு உதவத் தயாராக இருப்பதாக ஜெய்சங்கர் கூறினார். சூரிய வெப்பத்தை மாற்று மின்சக்தி மூலமாக பயன்படுத்த இந்திய உதவி ஏற்கனவே பெறப்பட்டுள்ளது. இந்தத் துறைக்கு எதிர்காலத்தில் இந்தியா மேலும் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க முடியும் என்று அமைச்சர் கூறினார்.

கொரோனாத் தொற்று நோயால் வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையை புதுப்பிக்க வேண்டிய அவசியம் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

“மாலைதீவு தொடர்ந்து பபல் முறைமையில் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருகின்றது. ஏற்கனவே ஏராளமான இந்தியர்கள் அங்கு சென்றுள்ளனர். தொற்று நோயால் ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து விடுபட மக்கள் சுற்றுலா பயணம் செய்ய விரும்புகிறார்கள். புதுடில்லியில் உள்ள ஹோட்டல்களில் இப்போது இந்தியர்கள் நிறைந்திருக்கின்றார்கள். இலங்கைக்குச் செல்ல நாங்கள் அவர்களை ஊக்குவிக்க முடியும்” என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

சுற்றுலாத்துறையைப் புதுப்பிக்க புதிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய இந்தியா, இலங்கை, மாலைத்தீவு மற்றும் நேபாளம் ஆகியவை இணைந்து விரைவில் கலந்துரையாடல் ஒன்றை நடத்த முடிவு செய்யப்பட்டது” – என்றுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.