நானே சு.கவின் தலைவர் மைத்திரி சட்டவிரோத தலைவர்.

நானே சு.கவின் தலைவர்
மைத்திரி சட்டவிரோத தலைவர்;
சந்திரிகா அம்மையார் அதிரடி.

தானே தற்போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 122 நினைவு தினம் காலி முகத்திடலில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு முன்பு இன்று காலை நடைபெற்றது.

இதில் கலந்துக்கொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, சுனேத்ரா பண்டாரநாயக்க ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்

இதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலரஞ்சலி செலுத்தினார்.

இதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பிணவருமாறு பதிலளித்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.

கேள்வி:- உங்கள் தந்தை ஆரம்பித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:- என்ன நினைக்க வேண்டும்.?

கேள்வி:- சுதந்திரக் கட்சி பயணிக்கும் பாதை சரியானதா?

பதில்:- எந்தப் பயணமும் இல்லை. இதில் சரி, பிழை எனக் கூறுவது எப்படி?

கேள்வி:- சுதந்திரக் கட்சிக்கு தற்போது அநீதி இழைக்கப்படுவதாக தற்போது இருப்பவர்கள் கூறுகின்றார்களே?

பதில்:- இதனை ஒரு வருடத்துக்கு முன்பே நான் கூறி விட்டேன். தற்போது கட்சியின் தலைவராக இருப்பவர் சட்டவிரோதமாகவே உள்ளார்.

கேள்வி:- இன்றைய நினைவு அஞ்சலி நிகழ்வுக்கு உங்களுக்கு அழைப்பு கிடைக்கவில்லையா?

பதில்:- இல்லை. எந்தவித அழைப்பும் கிடைக்கவில்லை. அவர்களுக்கு இந்த இடம் சொந்தமில்லை. நாம் விரும்பிய நேரத்தில் இங்கு வருவோம் – என்றார்.

இதையடுத்து மலரஞ்சலி செலுத்திய முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவிடமும் ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பினர்.

கேள்வி:- தானே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்றும், நீங்கள் சட்டவிரோதமாகவே தலைவர் பதவியில் இருப்பதாகவும் சந்திரிகா கூறுகின்றார். உங்கள் பதில் என்ன?

பதில்:- அப்படியில்லை. நாம் அனைவரும் ஒன்றிணைந்தே செயற்படுகின்றோம் எமக்குள் பிளவுகள் இல்லை.

கேள்வி:- தொடர்ந்தும் அரசுடன் இணைந்து பயணிப்பீர்களா? சுதந்திரக் கட்சி கலக்கமடைந்துள்ளதா?

பதில்:- இன்னும் காலமுண்டு. பார்க்கலாம் – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.