சட்ட விரோத மின்சாரம் பெற்ற 1937 நபர்கள் கைது

2019 மே மாதத்திலிருந்து 2020 மே மாதம் வரையான காலப்பகுதியில் சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுக் கொண்ட 1937 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது, நீதிமன்ற தீர்ப்பின் படி அபராதத் தொகையாக 59 மில்லியன் ரூபாய் அறவிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையினால், விசாரணை குழு மற்றும் பொலிஸாருடன் இணைந்து சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுக் கொள்ளும் நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஆண்டுதோறும் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றுக் கொள்ளப்படுவதால் இலங்கை மின்சார சபைக்கு 100 மில்லியன் ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அநேகமானோர் பயிர்ச் செய்கைகளை விலங்குகளிடம் பாதுகாப்பதற்காக இவ்வாறு சட்டவிரோதமாக மின்சாரத்தை பெறுவதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, சட்டவிரோதமாக மின்சாரத்தை பெறுவதற்கு முயற்சிப்பதனால் ஆண்டுதோறும் 100 தொடக்கம் 150 பேர் வரையில் மின்சாரம் தாக்கி உயிரிழக்கின்றனர் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

Comments are closed.