காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தார். மேலும், 20க்கும் மேற்பட்டோர் ஈடுபடுகளில் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே மதூரில் ஒரு கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். இன்று காலை வழக்கம்போல குவாரிக்கு வேலைக்கு வந்த பணியாளர்கள், வேலைகளைப் பார்க்கத் தொடங்கினர். அப்போது, எதிர்பாராதவிதமாக, குவாரியில் ஒரு பகுதி சரிந்து விழுந்தது.

இந்த விபத்தில் 6 டாரஸ் லாரிகள், ஒரு பொக்லைன் இயந்திரம் ஆகியவை சிக்கியுள்ளன. இதுவரை 4 பேர் சடலமாக மீட்கப்படுள்ளனர். மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. சுமார் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாறைச் சரிவில் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பெரும் பாறைகள் சரிந்து விழுந்திருப்பதால் அவற்றை அகற்றுவதில் சிக்கல் நீடிக்கிறது. அருகிலுள்ள கல்குவாரிகளிலுள்ள இயந்திரங்களைக் கொண்டுவந்து பாறைகளை அகற்றும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுவருகிறார்கள். விபத்து நடைபெற்ற இடம் மிகவும் குறுகிய பாதை என்பதால் மீட்புப்பணியில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.