பதவியை ராஜினாமா செய்த இந்த அண்ணாமலை ஐ.பி.எஸ், யார்.

ஐ.பி.எஸ். பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலை ஐ.பி.எஸ்., டெல்லியில் பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.

கர்நாடக காவல்துறையில் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை ஐ.பி.எஸ்., திடீரென ஐ.பி.எஸ் பணியில் இருந்து விலகியதையடுத்து, தற்சார்பு விவசாயத்தில் களமிறங்க உள்ளதாக கூறி வந்தார். அரசியல் ரீதியான பேட்டி, வலதுசாரி சிந்தனையாளர், சுயசார்பு பேச்சு, ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர் என பல யூகங்கள் அவரை சுற்றி வந்த நிலையில், தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். பதவியை எதிர்பார்த்து பாஜகவில் சேரவில்லை. சாதாரண தொண்டராகவே வந்துள்ளேன் என்று பாஜகவில் சேர்ந்த பின்னர் அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்த அண்ணாமலை ஐ.பி.எஸ்., யார்.

தமிழகத்தின் கரூர் மாவட்டம் தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருடைய தந்தை பெயர் குப்புசாமி. இவருடைய தாய் பரமேஸ்வரி, மனைவி அகிலா சுவாமிநாதன். கோவையில் என்ஜினீயரிங் படித்த அண்ணாமலை, இந்திய மேலாண்மைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிப்பையும் முடித்தார். 2011ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் ஆக தேர்வாகி கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தார். இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டார். தவறு செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்ததன் மூலம் பொதுமக்களால் ‘கர்நாடக சிங்கம்’ என்று அழைக்கப் பெற்றார்.

1.2015ஆம் ஆண்டு உடுப்பியின் காவல்துறை கண்காணிப்பாளர்,
2.2016ஆம் ஆண்டு சிக்மளூரு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்,
3.2018ஆம் ஆண்டு பெங்களூர் தெற்கு மாவட்டத்தின் துணை ஆணையர் என சினிமா போலீஸ் பாணியில் தொடர்சியான அதிரடி 4.நடவடிக்கையில் ஈடுபட்ட அண்ணாமலை 2018ஆம் ஆண்டுக்குள் டி.சி.பி.யாக பதவி உயர்வு பெற்றார்.
5.கர்நாடக சிங்கம் என்று அறியப்பட்ட அண்ணாமலை, உடுப்பியில் பணியாற்றியபோது சட்டவிரோத சக்திகள் மீது அவர் எடுத்த
நடவடிக்கைகளுக்காக கவனிக்கப்பட்டார்.

இதனிடையே, கடந்த ஆண்டு மே மாதம் தனது ஐ.பி.எஸ். பணியை அண்ணாமலை ராஜினாமா செய்தார். அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில், காக்கிச்சட்டை அணிந்து செயல்பட்ட ஒவ்வொரு நிகழ்வுகளையும் என்னால் மறக்க முடியாது. போலீஸ் பணி என்பது கடவுளுக்கு நெருக்கமான பணி என்பதை நம்புகிறேன்.
கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு சென்றபோது வாழ்க்கையின் முக்கியத்துவம் பற்றி அறிந்தேன். ஐ.பி.எஸ். அதிகாரி மதுக்கர் செட்டியின் இறப்பும் என் வாழ்க்கையை சுயபரிசோதனை செய்ய தூண்டியது. எனவே, 6 மாதங்களாக யோசித்து ராஜினாமா முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

ராஜினாமா செய்த அண்ணாமலை ‘வீ தி லீடர்’ என்ற அமைப்பை ஆரம்பித்தார். அது அரசியல் அமைப்பு அல்ல என்றும் அரசியலைத் தூய்மைப்படுத்தும் அமைப்பு என்றும் தெரிவித்த அவர், மக்களிடன் விழிப்பிணர்வை ஏற்படுத்துவதற்காக அதனை ஆரம்பித்ததாக தெரிவித்தார். பல சமூக பணிகளைஅதன் மூலமாக செய்யப்போவதாகவும் தெரிவித்தார். மேலும், இயற்கை விவசாயம் செய்யப்போவதாகவும், நாட்டுமாடுகளை வளர்க்கப் போவதாகவும் தெரிவித்தார். அதற்கான பணிகளையும் அவர் செய்து வந்தார்.

வேலையை ராஜினாமா செய்து விட்டு வந்த அண்ணாமலையை பாஜக ஆதரவாளர்களும், ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களும் கொண்டாடினர். சில ஆர்.எஸ்.எஸ் மறைமுக குழுவுடன் அவர் வேலை பார்த்து வந்ததாகவும் கூறப்பட்டது. வலதுசாரி சிந்தனையாளராகவும் அண்ணாமலை சித்தரிக்கப்பட்டார். பாஜகவின் உறுப்பினர் அட்டை இல்லாமல் இருந்தாலும், அவரது செயல்பாடுகள் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். தொடர்புடையதாகவே இருந்தது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மறைமுகமாக நிர்வகிப்பதாக கூறப்படும் Youth Thinkers Forum என்ற அமைப்பின் பல கூட்டங்களில் அண்ணாமலை செற்பொழிவு ஆற்றியுள்ளார்.

சி.ஏ.ஏ. விவகாரத்தில் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தவர் அண்ணாமலை. இந்த நிலையில், பாஜகவில் தற்போது அதிகாரப்பூர்வமாக அண்ணாமலை இணைந்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்த தன்னால் இயன்ற முயற்சியை செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.