பூநகரி – வலைப்பாடு கிராமத்தில் உறவினர்கள் 10 பேருக்குத் தொற்று! – வடக்கில் இன்று 12 பேர் அடையாளம்

கிளிநொச்சி மாவட்டம், பூநகரி – வலைப்பாடு கிராமத்தில் 10 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட 379 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 12 பேர் உள்ளிட்ட 17 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்று உறுதியானவர்களில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டம், பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வலைப்பாடு கிராமத்தில் முன்னதாக ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தப் பட்டிருந்தவர்களில் 10 பேருக்கே இன்று பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த 10 பேரும் முன்னர் தொற்று உறுதி செய்யப்பட்டவரின் உறவினர்களாவர்.

இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்கும், மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்கும், வவுனியா தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5 பேருக்கும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.