பளையில் பல ஏக்கர் காணிகளை சீனாவுக்கும் சிங்களவர்களுக்கும் வழங்க அரசு நடவடிக்கை.

பளையில் பல ஏக்கர் காணிகளை சீனாவுக்கும் சிங்களவர்களுக்கும் வழங்க அரசு நடவடிக்கை. அம்பலப்படுத்தினார் சுரேஷ்.

கிளிநொச்சி மாவட்டம், பளை பகுதியில் பல ஏக்கர் காணிகளை சீன நிறுவனம் ஒன்றுக்கும், சிங்கள வர்த்தகர்களுக்கும் வழங்கும் நடவடிக்கை அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

குறித்த விடயத்தை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டுகொள்ளாமலிருப்பது வருத்தமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பளை பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமாக 3 ஆயிரம் ஏக்கர் காணியுள்ளது. அந்தப் பகுதியில் சீன நிறுவனத்துக்கும், சிங்கள முதலாளிகளுக்கும் அரசு காணி வழங்கவுள்ளதாக நம்பத்தகுந்த செய்தி எமக்குக் கிடைத்துள்ளது.

தமிழ் மக்களின் காணிகளைப் பறிமுதல் செய்து சீனக்காரருக்குக் கொடுக்க, சிங்களவர்களுக்குக் கொடுக்க முன்னாயத்த நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.

பளையில், புதுக்காட்டுச் சந்திக்கு அண்மையில் தேசிய காணி அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான 287 ஏக்கர் தென்னந்தோட்டங்கள் உள்ளன.

அதை சிங்கள முதலாளிகளுக்குக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தக் காணிகளை யாழ்ப்பாணத்திலுள்ள வர்த்தகர்கள் கேட்டும், அவர்களுக்கு வழங்காமல் சிங்கள முதலாளிகளுக்கு வழங்கப்படுகின்றது.

அரசியல் பிரச்சினையில்லை, அபிவிருத்தி நடந்தால் போதும் என அரசு கூறிக்கொண்டிருக்கின்றது. அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்களின் காணிகளைப் பிடுங்கி சீனக்காரருக்கும், சிங்களவர்களுக்கும் கொடுக்கும் நடவடிக்கையைத்தான் இந்த அரசு மேற்கொள்கின்றது.

அரசு, இராணுவம் அனைவரும் கூட்டாக இதனைச் செய்கின்றார்கள். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதைக் கண்டுகொள்ளாமலிருப்பது வருத்தமானது.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரத்துக்கு மாற்ற முயல்வதும் இதற்குத்தான்.

இந்த மாற்றத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும். வடக்குக்கான பிராந்திய அலுவலகம் வடமத்திய மாகாணத்துக்கு மாற்றுவதை ஏற்க முடியாது.

பளையில் சீனா அல்லது வேறு நிறுவனங்களுக்குக் காணி கொடுப்பதை நிறுத்த வேண்டும். இந்தப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் காணி கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களுக்குக் காணி வழங்காமல் சீனக்காரருக்கும், சிங்களவர்களுக்கும் வழங்குவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இனிவரும் நாட்களில் பெரும் போராட்டங்களுக்குத் தமிழ் மக்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டிய சூழலுக்கு அரசு தள்ளுகின்றது” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.