இலங்கைக்கு எதிரான பிரேரணையை வெற்றிகொள்வதில் பிரிட்டன் உறுதி! கூட்டமைப்பிடம் அந்நாட்டுத் தூதுவர் தெரிவிப்பு

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகப் பிரிட்டன் கொண்டுவரும் பிரேரணையை வெற்றிகொள்வதில் தாம் உறுதியாக இருப்பதாகவும், இது குறித்து சபையின் உறுப்பு நாடுகளுடன் பேச்சுகளை முன்னெடுப்பதாகவும் இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சேரா ஹல்டன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோர் பிரிட்டன் தூதுவரைக் கொழும்பில் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சந்திப்பு தொடர்பில் சுமந்திரன் எம்.பி. கருத்துத் தெரிவிக்கையில்,

“ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நடைமுறையில் உள்ள விவகாரங்கள் குறித்தும் பேசியிருந்தோம். குறிப்பாக தற்போது கூடியுள்ள 46 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயங்களை மீண்டும் கையாளவுள்ள நிலையில் இம்முறை பிரிட்டன் தலைமையில் கொண்டுவரும் பிரேரணையில் இலங்கையின் பொறுப்புக்கூறலைக் கடுமையாக வலியுறுத்தும் விதத்தில் அமைதல் வேண்டும் என்பதையும், பிரிட்டனி ன் மேற்பார்வை தொடர்ந்தும் இருக்கக்கூடிய விதத்திலான பிரேரணையைக் கொண்டுவர வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளோம். அதேபோல் பிரேரணையை வெற்றிகொள்ள உறுப்பு நாடுகளைப் பிரிட்டன் வலியுறுத்தியுள்ளமைக்கு நாம் எமது நன்றிகளையும் தெரிவித்துள்ளோம்.

மேலும், இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் பிரிட்டன் முன்னெடுக்கும் நகர்வுகளுக்குப் பூரண ஒத்துழைப்புகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் வழங்கும் எனவும், பிரிட்டனின் மேற்பார்வை கண்டிப்பாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.