மியன்மாரைப் போல் மோசமான நிலை இலங்கையிலும் ஏற்பட்டுவிடக்கூடாது!

மியன்மாரைப் போல் மோசமான நிலை
இலங்கையிலும் ஏற்பட்டுவிடக்கூடாது!
முன்னாள் சபாநாயகர் கரு எச்சரிக்கை

“இன்று மியன்மாரில் நடந்துகொண்டிருக்கும் ஜனநாயக விரோத செயற்பாடுகள் நாளை எமது நாட்டிலும் நடந்துவிடக்கூடாது.

இவ்வாறு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

அதேநேரம் இன்று இலங்கை அரசின் பயணம் ஆரோக்கியமானதல்ல என்பது தெளிவாகத் தெரிகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் நிகழ்காலச் செயற்பாடுகள், மாகாண சபைத் தேர்தலுக்கான நகர்வுகள் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சுயாதீன ஆணைக்குழுக்கள் மீது அரசியல் தலையீடுகள் ஏற்பட ஆரம்பித்துவிட்டன. இவ்வாறான நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தக்கூடாது.

சுயாதீனம் என்ற பெயரில் மறைமுகமான அரசியல் அதிகாரம் ஒன்று இயங்கிக்கொண்டுள்ளது. அதிகார மோகத்தில் செயற்படும் ஒரு சிலர் அரசியல் தலைவர்களின் நோக்கங்களுக்கு இடமளிக்கக்கூடாது. நீதிமன்ற சுயாதீனம் கூட இன்று பாரிய சவாலுக்குட்படுத்தப்பட்டு வருகின்றது.

அத்தோடு நாட்டின் சுயாதீனத்தைக் கேள்விக்குட்படுத்தும் அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை அவசர அவசரமாகக் கொண்டு வந்து நிறைவேற்றிய சிலருக்குத்தான் இன்று மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இவை தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பலமாகக் குரல் எழுப்ப வேண்டும்.

இதேவேளை, மியன்மார் இன்று மிக மோசமான ஜனநாயக அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஜனநாயகத்துக்கான புரட்சியில் பல நூறு பேர் இப்போது வரையில் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு ஜனநாயகப் புரட்சி ஒன்று வெடித்துள்ளது.

இன்று மியன்மாரில் நடந்துகொண்டிருக்கும் ஜனநாயக விரோதச் செயற்பாடுகள் நாளை எமது நாட்டிலும் நடந்துவிடக்கூடாது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.