பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்களின் ஜனாதிபதிக்கான ரெலி மெயில் போராட்டம்.

2016ஆம் ஆண்டு தொடக்கம் 2019 வரையான காலப்பகுதியில் அரசாங்க சேவையில் இருந்து ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியத்தை வழங்குமாறு கோரும் ரெலி மெயில் போராட்டம் எதிர்வரும் 15ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக ஓய்வூதியதாரர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் உப தலைவர் ஏ.எல்.எம்.முக்தார் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில்;

பாதிக்கப்பட்டிருக்கின்ற சுமார் 1,20,000 ஓய்வூதியக்காரர்களும் அன்றைய தினம் ஏக காலத்தில் தபாலகங்களுக்கு சென்று, ஜனாதிபதிக்கு முகவரியிட்டு ரெலி மெயில்களை அனுப்புவதற்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி, நெறிப்படுத்துமாறு மேற்படி சங்கம் நாடாளாவிய ரீதியில் உள்ள அதன் அங்கத்தவர்களைக் கேட்டுள்ளது.

“ஜனாதிபதி அவர்களே, 2016 முதல் 2019 ஆம் ஆண்டு வரை அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்குரிய ஓய்வூதிய அதிகரிப்பை உங்கள் முதலாவது அமைச்சரவைக் கூட்டத் தீர்மானம் மூலம் நிறுத்தி வைத்துள்ளீர்கள். இது மிக அநீதியானது. இதனை எமக்கு விரைவாக வழங்குங்கள்” எனக்கோரி குறித்த ரெலிமெயில் அனுப்பப்படவுள்ளன.

மேலதிக தகவல்களுக்கு 0772301500 எனும் அலைபேசியுடன் தொடர்பு கொள்ளுமாறு பாதிக்கப்பட்டுள்ள ஓய்வூதியக்காரர்களை கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை மேற்படி சங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்கும் தீர்மானத்திற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் 17ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

(அஸ்லம் எஸ்.மௌலானா)

Leave A Reply

Your email address will not be published.