அரசியலிலும் பெண்கள் அதிகார மிக்கவர்களாக உயர்ந்திட வேண்டும் – சீமான் மகளிர் நாள் வாழ்த்து.

அறிக்கை: ஆண்டாண்டு காலமாய் உலகம் உய்ய அதிக உழைப்பை நல்கும் பெண்கள் அரசியலிலும் அதிகார மிக்கவர்களாக உயர்ந்திட வேண்டும் – சீமான் வாழ்த்து | நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

உலகில் மானுடகுலம் தழைக்க உயிரும், உடலும், உருவமும் கொடுத்து நம்மையெல்லாம் உருவாக்குபவர்கள் பெண்கள்! பூமியில் பிறந்தநாள் முதல் தன் குருதியையே தாய்ப்பாலக்கி உணவளித்து நமையெல்லாம் நலமும், வளமும் பெறச்செய்து வளர்த்தெடுத்தவர்களும் பெண்கள்! தன்னலம் சிறிதுமின்றி, எவ்வித எதிர்பார்ப்புமின்றி, பெண்கள் செய்யும் அர்ப்பணிப்புமிக்க ஈகம் என்பது எதுவொன்றினாலும் ஈடுசெய்ய முடியாதது. அதனால்தான் ‘மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் புரிந்திட வேண்டுமம்மா!’ என்று பெண்களைப் போற்றிக் கொண்டாடுகிறார் கவிமணி தேசிய விநாயகம்.

உலகில் மூத்த தொல்குடியான தமிழினம் முதலில் தாய்வழிச் சமூகமாகவே தோன்றி சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பில் பெண்களின் தலைமையேற்றே கிளைத்தது. சங்க காலத்திலும் பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாக, கலையில் தேர்ந்தவர்களாக, அரசியல் அதிகாரம் மிக்கவர்களாகத் திகழ்ந்துள்ளனர். அப்படிப் போற்றிக் கொண்டாடப்பட்ட பெண்கள் இடைக்காலத்தில் நிகழ்ந்த அந்நியப் பண்பாட்டுப் படையெடுப்புகளினாலேயே பெண்களுக்குரிய தலைமைத் திட்டமிட்டுப் பறிக்கப்பட்டுப் பெண்ணடிமைத்தனம் தமிழ் மண்ணில் வேரூன்றியது.

அதனைக் கண்டித்து “பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும் அண்ணுற வகுத்த அருட்பெருஞ்சோதி!” என்று பாலினச் சமத்துவத்தைப் பாக்களின் வழியே போதித்தார் அன்பின் வடிவாய் தோன்றிய வள்ளலார் . ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்! பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என்று பெண்களின் பேராண்மையைப் போற்றித் தொழுகிறார் பெரும்பாவலர் சுப்பிரமணிய பாரதி.

இழந்த உரிமைகளையும், பெருமைகளையும் மட்டுமின்றி அதிகாரங்களையும் மீளப் பெரும்பொருட்டே ‘பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே!’ என்று பெண்ணிய விடுதலைக்குச் சங்கநாதம் எழுப்புகிறார் புரட்சிப்பாவலர் பாரதிதாசன். ‘பெண் விடுதலை இல்லையேல், மண் விடுதலை இல்லை!’ எனக்கூறி பெண்ணியத்தின் பெருந்தேவையைப் பேரறிவிப்பு செய்கிறார் தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

ஆனால் அன்னியர் ஆட்சியில் அடிமைகளாக வாழ்ந்தபோது இல்லாத அளவிற்கு, விடுதலைப்பெற்ற இந்தியாவில் அடிமைத்தனத்திற்கும், உரிமைப் பறிப்புக்கும் எதிராகப் போராடி மெல்ல மெல்ல மேலெழுந்து வரும் பெண்களை அடக்கி ஒடுக்கும் விதமாகப் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அண்மைக்காலங்களில் பல்கிப்பெருகி வருகிறது. ஆணாதிக்க வன்முறையும், பாலியல் குற்றங்களும் விளிம்புநிலையில் இருக்கும் அடித்தட்டு வர்க்கப்பெண்கள் மீதுதான் அதிகளவில் நிகழ்த்தப்படுகிறது என்றாலும், இவ்வகைத்தாக்குதல்கள் யாவும் ஒட்டுமொத்தப்பெண் சமூகத்தின் மீதே ஏவப்படுபவையே என்பதை எவரும் மறுக்க முடியாது.

50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நிலத்தை ஆண்ட திராவிட கட்சிகளின் ஆட்சியில் பெண்ணிய விடுதலையும், பாலினச்சமத்துவமும் வெறும் உத்தட்டளவில் மட்டுமே பேசப்படுபொருளாக இருக்கிறதே ஒழிய, அதனை இன்றுவரை முழுமையாகச் செயலாக்கம் பெறவில்லை. ஆனால், ஈழத்தாயகத்தில் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஆண் – பெண் சமத்துவத்தை அனைத்து துறைகளிலும் முழுமையாக நிறுவிக்காட்டினார். அவர்தம் பிள்ளைகள் அதனைத் தமிழகத்தில் செயற்படுத்த அணியமாகி நிற்கிறோம்.

கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் சமவாய்ப்பு என்பதைவிட ஆயிரம் மடங்கு உயர்வானது அரசியலில் பெண்கள் தங்களுக்கான சமவாய்ப்பினை அடைவதென்பது. ஏனென்றால் அரசியலில் பெண்கள் அதிகாரத்தைப் பெறுவதென்பது மற்ற அனைத்து துறைகளிலும் தங்களுக்கான உரிமைகளைப் பெறுவதற்கான திறவுகோலாகும். அதனை நன்குணர்ந்தே ஆட்சி, அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பே இந்தியத் தேர்தல் அரசியல் வரலாற்றில் இதுவரை எவரும் செய்திடாத முன்னெடுப்பைக் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் ஆண்களையும், 20 தொகுதிகளில் பெண்களையும் சரிநிகராகக் நாம் தமிழர் கட்சி களமிறக்கியது. உண்மையான பாலினச்சமத்துவத்தைப் பேணும் அப்பெருஞ்செயலின் நீட்சியாக, எதிர்வரும் சட்டமன்றத்தேர்தலிலும் 117 தொகுதிகளில் சரிபாதி இடங்களில் பெண்களைக் களம் காண பேரறிவிப்புச் செய்து புதிய வரலாறு படைத்துள்ளது.

அப்பெருமையுடனும், மனநிறைவுடனும் இந்நாளில் பாலினச்சமத்துவத்தை நிலைநாட்டவும், பெண்களுக்குரிய உரிமைகளைப் பெற்றுத் தரவும் நாம் தமிழர் கட்சி சமரசமின்றிச் சமர் செய்யும் என உறுதியளிக்கிறேன். ஆணுக்குப் பெண் சமம் என்பதல்ல; ஆணும் பெண்ணும் சமம் என்பதே எமது உயரிய கொள்கை நிலைப்பாடு.

Leave A Reply

Your email address will not be published.