யாழ். பல்கலை ஒழுக்காற்று அதிகாரி, வங்கி ஊழியர்கள் உட்பட வடக்கில் மேலும் 28 பேருக்குக் கொரோனா!

வடக்கு மாகாணத்தில் மேலும் 28 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது.

இவர்களில் 10 பேர் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இனங்காணப்பட்டுள்ளனர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 255 பேரின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இவர்களில் 10 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்களில் 6 பேர் நேற்று உடுவிலில் கண்டறியப்பட்ட இலங்கை வங்கி ஊழியர் ஒருவருடன் நேரடித் தொடர்புடைய சக ஊழியர்களாவர்.

மேலும் மூவர், இ.போ.ச. காரைநகர் சாலை நடத்துநர் ஒருவருக்கு நேற்று தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அவருடைய உறவினர்களாவர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஒழுக்காற்று அதிகாரி (மார்ஷல்) ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று 450 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் 18 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதி ஒருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

மன்னாரில் 17 பேர் தொற்றுடன் கண்டறியப்பட்டனர். இவர்களில் 8 பேர் மன்னார் மீன் சந்தையில் கண்டறியப்பட்டனர்.

மன்னார் மீன் சந்தை தொழிலாளி ஒருவர் ரயிலுடன் மோதி உயிரிழந்த நிலையில் அவருக்குக் கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டது.

இதனால் மன்னார் மீன் சந்தையில் இன்று எழுமாறாக சிலரிடம் மாதிரிகள் பெறப்பட்டன. இவர்களில் 8 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும், தனியார் நிதி நிறுவனமான கொமர்ஷல் கிறடிட்டின் மன்னார் கிளையில் பணியாற்றும் சிலருக்கு கொரோனாத் தொற்று அண்மையில் கண்டறியப்பட்டது. அங்கு பணியாற்றும் மேலும் இருவருக்கு தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டது.

மன்னார் நகர் தொற்றாளர்களுடன் தொடர்புடைய மேலும் 6 பேருக்கு இன்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 29 வயது கர்ப்பவதிக்கும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.