ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரம் தாக்கல்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் சட்டமா அதிபரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று நீதி அமைச்சர் அலி சப்ரி ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இதன்படி, குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராக மிக விரைவில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பாக சட்டமா அதிபர் தனது மேற்பார்வையில் விசாரணைகளை நடத்தி வருகின்றார். அதேபோல், குற்றப்புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு உள்ளிட்ட பொலிஸ் திணைக்களத்தால் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அவர்களின் சில அறிக்கைகள் சட்டமா அதிபரின் கைக்குச் சென்றுள்ளன. ஏற்கனவே குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனினும், மிக விரைவில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்வோம் என்று நம்புகின்றோம்.

இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தொடர்ந்து சட்டமா அதிபர் மற்றும் பொலிஸாருடன் இணைந்து செயற்பட்டு வருகின்றார்” – என்றார்.

இது இவ்வாறிருக்க, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராக இன்னும் சில நாட்களில் சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அதேபோல், இந்தத் தாக்குதல்களுக்கு காரணமான சந்தேகநபர்கள் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.