யாழ்ப்பாணத்தில் மேலும் 17 பேருக்குக் கொரோனாத் தொற்று!

யாழ்ப்பாணத்தில் மேலும் 17 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடம் இரண்டிலும் 640 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது 18 பேருக்குத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் 17 பேரும், கிளிநொச்சியில் ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வர் சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர்கள். மற்றைய ஒருவர் யாழ்ப்பாணம் வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பணியாற்றுபவர்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் நால்வருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நோயாளர் விடுதியில் சிகிச்சை பெற்ற இருவருக்குக் கொரோனாத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சேர்க்கப்பட்ட நால்வருக்குக் கொரோனாத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் நால்வரும் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

சங்கானை வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்குச் சிகிச்சைக்குச் சென்ற இருவருக்குக் கொரோனாத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒருவருக்குக் கொரோனாத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது”என்றார்.

Leave A Reply

Your email address will not be published.