யாழ்ப்பாணத்தில் மேலும் 34 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி!

யாழ்ப்பாணம் மாநகர சந்தை மற்றும் கடைத்தொகுதி வர்த்தகர்கள், பணியாளர்களில் 22 பேர் உட்பட மேலும் 34 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று கிடைத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணம் மாநகர வர்த்தகர்கள், பணியாளர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய தொடர்புடையவர்கள் என 431 பேரின் மாதிரிகள் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை பெறப்பட்டன. அவர்களில் 34 பேருக்குக் கொரோனாத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

431 பேரின் மாதிரிகள் முல்லேரியா ஆய்வுகூடத்துக்கு பி.சி.ஆர். பரிசோதனைக்காக அனுப்பிவைக்கட்டன.

அவற்றில் 34 பேருக்குத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு இன்று காலை அறிக்கை கிடைத்துள்ளது.

22 பேர் யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலையங்களின் வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்கள். ஏனைய 12 பேர் ஏற்கனவே தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களது நெருங்கிய தொடர்புடையவர்கள்.

22 பேருக்குத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அவர்கள் சார்ந்த 6 வர்த்தக நிலையங்கள் யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிப்பில் மூடப்பட்டுள்ளன” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.