தமிழருக்குப் புத்தாண்டு வல்லமை தர வேண்டும்! – வாழ்த்துச் செய்தியில் சரவணபவன்.

“தென்னிலங்கையில் விஸ்வரூபமெடுத்துள்ள சிங்கள – பௌத்த பேரினவாதம், தமிழினத்தை வேரோடு அழித்தொழித்து விட்டு அடுத்த காரியமாற்றும் நிலையில் இருக்கின்றது. இந்தப் பயங்கரமான சூழலை எதிர்கொள்ளவும், அதனை உடைத்தெறிந்து தனது வேணவாவை தமிழினம் பூர்த்தி செய்யவும் இந்தச் சித்திரைப் புத்தாண்டு எங்களுக்கு வல்லமை தரவேண்டும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் விடுத்துள்ள சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“பிலவ வருடப் பிறப்பைக் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் அன்புரிமையுடன் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஒவ்வொரு பண்டிகைகளும் வரும்போது அவை எம் மக்களுக்கு விடிவைத் தராதா என்று ஏக்கத்துடனேயே காத்திருந்து கழிந்து செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலையிலேயே இன்று தமிழினம் இருந்து வருகின்றது. ஏமாற்றங்களே தொடர் கதையாகிப்போயுள்ள சூழலில் பிறக்கின்றது பிலவ வருடம்.

கொண்டாட்டங்கள் எங்கள் வாழ்வின் ஓரங்கம். அவற்றைத் தவிர்க்க முடியாது. எங்கள் கலாசாரங்களுடன் அவை இரண்டறக் கலந்துள்ளன. விரக்தியிலிருந்தாலும் மனதிலிருக்கும் நம்பிக்கையின் தெம்புடன் இந்தப் புத்தாண்டையும் நாம் கொண்டாடுவோம்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.