அரசியல் பழிவாங்கல்கள்’ விசாரணை: பரிந்துரைகளை அமுல்படுத்த யோசனை நாடாளுமன்றில் 21ஆம் திகதி முன்வைப்பு.

2015 ஜனவரி 8 ஆம் திகதி முதல் 2019 நவம்பர் 16 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான யோசனை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் எதிர்வரும் 21 ஆம் திகதி மேற்படி யோசனை சபையில் முன்வைக்கப்படும் எனத் தெரியவருகின்றது. அத்துடன் இந்த விவகாரம் தொடர்பில் ஏப்ரல் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் விவாதம் நடத்தப்படலாம் எனவும் அறியமுடிகின்றது.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையானது அரசியல் உள்நோக்கம் கொண்டது எனவும், எதிரணி உறுப்பினர்கள் 10 பேரின் குடியுரிமையைப் பறிப்பதற்கான யோசனைகூட அதில் உள்ளது எனவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

குறித்த ஆணைக்குழு நீதிமன்ற அதிகாரத்தைக்கூட சவாலுக்குட்படுத்தியுள்ளதால் பரிந்துரைகள் அமுலாவதைத் தடுப்பதற்காக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளையும் எதிரணி மேற்கொண்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.