வடக்கில் 4 மாவட்டங்கள் உட்பட 18 மாவட்டங்களில் கடும் மழை.சிவப்பு எச்சரிக்கை.

நாட்டில் 18 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அநுராதபுரம், புத்தளம், குருநாகல், மாத்தளை, கம்பஹா, கேகாலை, கண்டி, கொழும்பு, நுவரெலியா, பதுளை, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இம் மாவட்டங்களில் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் இடி, மின்னல் தாக்கம் ஏற்படும் என்பதால் மக்கள் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இடி மற்றும் மின்னல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை தவிர்த்துக் கொள்வதற்காக மரங்களின் அருகில் நிற்றல் என்பவற்றை தவிர்த்துக் கொள்வதோடு, பாதுகாப்பான கட்டடங்களில் இருக்குமாறும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விளையாட்டு மைதானம், தோட்டங்கள் போன்ற பரந்த வெளிகளில் நிற்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இடி இடிக்கும் சந்தர்ப்பங்களில் தொலைபேசி உள்ளிட்ட இலத்திரனியல் பொருள்கள் பாவனையின் போதும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.