பெளத்த அமைப்புகளுக்கு அரசு தடை எனக்கூறி, தீவிரவாத தேரர்கள், இன்னொரு “ரவுண்ட்” ஆடப்பார்க்கிறார்கள் -மனோ கணேசன்.

பெங்கமுவே நாலக தேரர், அஸ்கிரிய அனுநாயக தம்மானந்த தேரர், ரத்தன தேரர், முருத்தெடுகம ஆனந்த தேரர், சிங்கள ராவய தேரர், ஞானசார தேரர், ராவண பலய தேரர் ஆகிய பெளத்த தீவிரர்கள், இப்போது புதிய பாடல் ஒன்றை பாடுகிறார்கள்.

இந்த அரசு தமது பெளத்த அமைப்புகளை தடை செய்ய போகிறது என்ற புரளியை கிளப்பி மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார்கள்.

உண்மையில் இந்நாடு உருப்பட வேண்டுமானால், பெளத்த தேரர்கள் அரசியலில் தலையிடுவதை தடை செய்யத்தான் வேண்டும். நான் இரண்டு கைகளையும் உயர்த்தி ஆதரிப்பேன். ஆனால், இந்த அரசு இப்போது இவர்களை தடை செய்து தற்கொலை செய்ய போவதில்லை என தமுகூ தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

முஸ்லிம் அரசியல்வாதிகள், குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் ரிசாத், ரவுப் மீது, உயிர்த்த ஞாயிறு குண்டு தொடர்பில் குற்றம் சாட்டப்பட வேண்டும் என இவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அதற்கான சாட்சியம் இல்லை. அப்படி சாட்சியங்கள் இருந்தால், இந்த அரசே சும்மா விடாது.

தேரர்களிடம் சாட்சியம் இருந்தால் அதை விசாரணை கமிசனிடம் அவர்கள் தர வேண்டும். ஆனால், அப்படி இவர்களிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை.

தமிழ், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் மட்டுமே இருக்கிறது. தமிழ், முஸ்லிம் அடிப்படைவாதம் பற்றி பேசும் இவர்கள் தமது அடிப்படைவாத, இனவாதத்தை தேசபக்தியாக காட்டுகிறார்கள்.

ஆகவே இன்று, அரசின் பிரதான கட்சியில் உள்ள தீவிரவாதிகளையும், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட நபர்களையும் கொண்டு, எதிரணியிலும் சிங்கள பெளத்த தீவிரர்கள் கிடைத்தால், அவர்களையும் சேர்த்து, இந்த அரசின் மீதான சிங்கள மக்களின் அதிருப்தியை திசை திருப்பி, மீண்டும் ஒருமுறை சிங்கள பெளத்த அரசு ஒன்றை அமைக்க முயல்கிறார்கள்.

அதாவது இன்னொரு ரவுன்ட் வர முயல்கிறார்கள்.

இனிவரும் மாற்று அரசு, ஒரு சிங்கள பெளத்த அரசாக இருப்பதை நாம் ஏற்க முடியாது. உலகமும் ஏற்காது. அது ஒரு இலங்கை (ஸ்ரீலங்கா) அரசாக மட்டுமே இருக்க முடியும்.

இல்லாவிட்டால் அடுத்த இரண்டு வருடத்தில், இலங்கை நாடு அரசியல், சமூக, பொருளாதார துறைகளில் தோற்றுப்போன நாடாக உலகில் ஒதுக்கப்படும். அதன்பிறகு சாம்பலில் இருந்து எழுந்து வர வேண்டியதுதான்.

Leave A Reply

Your email address will not be published.