செவ்வந்தித் தோட்டம் -சிறுகதை – கோதை

 

காணவில்லை என்ற செய்தியுடன் காவல் அதிகாரிகளின் தகவல் பிரிவு தொலைக்காட்சியூடாக தமது கடமையைச் செவ்வனே செய்து கொண்டிருக்க, அதையும் பார்த்தவாறே மாதவி அழுது சிவந்த கண்களுடன், மெத்திருக்கையில் புதைந்து போயிருந்தாள்.  குளிர் காற்று மிதமாக அவளிருந்த இருப்பறைக்கு வந்து போய்க்கொண்டிருந்தது.  கோடை காலத்தின் ஆரம்பம் ஆதலால் வீட்டின் முன்னே நின்றிருந்த மரத்தில் இலை தெரியாமல் பூத்திருந்த செரி ப்லோசம் (cherry blossom) இனிமையான ஒரு சுகந்தத்தைக்  காற்றோடு அனுப்பிக் கொண்டிருந்தது. அவளுக்கு அதன் மென்மையான சுகந்தம் மனதுக்கும் இதமாக இருந்தாலும் அவள் முகம் வாடி, வதங்கிப்போயிருந்தது.

இன்றோடு அவள் சகோதரி, அவளுடன் ஒரே நாளில், ஒரு சில நிமிட வித்தியாசத்தில் பிறந்தவன் காணாமல் போய் மூன்று நாட்கள் முடியப் போகின்றன.   பிறந்த காலத்திலிருந்தே அல்லது அவளுக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்தே அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்ததில்லை.  ஒரே பள்ளி, ஒரே பல்கலைக்கழகம், ஒரே வீடு என்றிருந்தவர்களுக்கு நட்புகள் கூட ஒரு வட்டமாகவே இருந்தது.  அவர்களுடைய பழக்க வழக்கங்களும் அதோடு தொடர்பான பொழுது போக்கு பயிற்சிகளும் கூட அவர்களுக்கு பேதமின்றி இருந்ததை அவர்கள் நட்புகளும், பெற்றோர்களும் கூட ரசிப்பார்கள்.   ஒருத்திக்கு தலையிடி வந்தால் மற்றவளுக்கும் நிச்சயமாக அது வரும் என்று தெரிந்தவர்கள் கூறுவார்கள்.

நகமும் சதையுமாக இருந்தவர்களுக்கிடையே அண்மையில் ஒரு விரிசல் கண்டது அதிசயம் தான். மாதவிக்கும் அவள் இரட்டை சகோதரி சாருமதிக்கும்  இடையே இருந்தாற்போல் இப்படி ஒரு விரிசல் விழுந்ததற்கு சாருமதியின் காதலே காரணமாயிற்று. இரண்டு வருடங்களுக்கு மேலாகக் காதலித்தவனின் வீட்டுக்கு அண்மையில் அவளுக்கேற்ற வேலையும் கிடைத்ததை அவள் மாதவிக்கு எடுத்துச் சொன்னபோது அவள் இப்படி இடிந்து போவாள் என்பது எதிர்பார்த்தது தான் என்றாலும், மாதவி இவ்வளவு தூரம் தன்னைப் போக விடாமல் தடுத்து, அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவாள் என்பது சிறிது அதிகப்படியாகவே இருப்பதாக சாருமதி எண்ணிக்கொண்டாள்.  காதலின் வேகத்திலும் அன்பிலும் தன் சகோதரி மாதவியை  விட்டுபோவதென்பது அவளுக்கு பெரியதொரு சவாலாக இருக்கவில்லை என்பது மாதவிக்கு மனதளவில் பெரும் பாதிப்பொன்றை ஏற்படுத்தியிருந்தது.

 

இந்த நேரம் பார்த்து இப்படியொரு அசம்பாவிதம் நடந்ததில் மாதவி இடிந்து போய் விட்டாள்.   அப்படி அவளுக்கு சொல்லாமல் போகும் அளவுக்கு அவள் சகோதரிக்கு  எதுவும் இருந்திருக்காது என்பதால், அவள் மறைவு அவளால் திட்டமிட்ட ஒரு விடயமாய் இருந்திருக்காது.

சாருமதி அவர்கள் இருவருக்குமான, வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்க எனப் போனவள் தான், திரும்பி வரவேயில்லை. முதல் சில மணித்தியாலங்களுக்கு மாதவி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.  இருந்தாலும் அதைத் தொடர்ந்து வந்த மணித்துளிகள் ஒவ்வொன்றும் அவளுக்கு மன நிம்மதியைக் கெடுக்க, இது தொடர்பாக காவல் நிலையத்தில் உடனடியாக அறிவித்திருந்தாள்.  தொலைபேசியும் தொடர்பில் இல்லை என்பதை அறிவித்த கையோடு அவள் நட்பில் இருந்தவர்கள் மூலமாக பல்வேறு இணையதள அறிவிப்புகளை இயன்றவரையில் எல்லோருக்கும் அனுப்பியிருந்தாள்.  அவளுக்கு உடலும் உள்ளமும் பதற்றம் அடைந்ததில், அவளால் எதையும் சரியாகப் பேசக்கூட முடியாதிருந்தது. அவளுக்கும் அவள் இரட்டை சகோதரிக்கும் இடையே இருந்த பல நட்புகள் அவளுக்குத் துணையாக அவளுடன் வந்து, நின்று தேவையான கடமைகளைச் செய்து, அவளுக்கு ஆதரவாக  இருக்க அவள் நெகிழ்வாக உணர்ந்தாள்.

88888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888

மதிய உணவு இடைவேளை என்று தனியாக ஒரு நேரம் அவனுக்கு இல்லாதிருந்தாலும், வேலைகளின் மத்தியில் பசிக்கும் போது சரியான ஒரு நேரத்தை தனக்காக எடுத்துக் கொள்ளும் உரிமையை அவ்வேலையிடத்தில் அதன்  நிர்வாகம் அவனுக்குக் கொடுத்திருந்தது. அவன் ஒரு நீண்ட கால, நம்பிக்கைக்கு உரிய, வேலைகளைக் கச்சிதமாக முடித்துக் கொடுக்கும் ஒரு தொழிலாளி.  இன்று காலை முழுவதும் வெவ்வேறு இடங்களில் வேலைகளை முடித்துக் கொண்டு, இப்போது தான் தனது தலைமைக் காரியாலயத்திற்கு ஒரு அலுவலாக வந்தவன், தற்செயலாக வரவேற்பறையில் போய்க்கொண்டிருந்த தொலைக்காட்சி செய்தியைப் பார்க்க நேர்ந்தது.  ‘காணவில்லை’ என்ற தலைப்பில் உள்ளூர் காவல் அதிகாரிகள் கொடுத்துக் கொண்டிருந்த செய்தியின் பின்னணியில் காட்டப்பட்டுக் கொண்டிருந்த வீதியும், அதன் பெயரும், அந்த ஊரும் அவனைச் சற்றே ஆச்சரியப்படுத்த, அவன் தன் பசியையும் மறந்து அங்கே நின்று மேற்கொண்டு செய்தி வாசிப்பாளர் சொல்வதைக் கேட்கத் தொடங்கினான்.

அவனுக்கு தான் கட்டட வேலைகள் செய்யும் போது வேலைகளின் தன்மைகளுக்கு ஏற்ப பலருடன் சேர்ந்து கூட்டாகவோ  அல்லது தனியாகவோ செய்யும் தேவை இருந்தது. அவன் திறமையில் நம்பிக்கை வைத்த அவனது நிர்வாகமும் முகாமைத்துவமும் அவனை தன் முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தை அவனுக்கு வழங்கியிருந்தார்கள். அன்றொரு நாள் அப்படித் தான் அவனுடைய காரியாலயத்துக்கு வந்து தன் வீட்டில் மிக அவசரமாக ஒரு கழிப்பிடம் ஒன்று தன் வீட்டுத் தோட்டத்திலுள்ள ஒரு கொட்டகைக்கு (shed) தேவைப்படுகிறது என்று சொல்லியிருந்த பெண்ணின் வீட்டு வேலையை அவன் தனியாக செய்வது என முடிவு செய்ததும், அங்கு போய் வந்ததும் அவனுக்கு ஞாபகம் வந்தது.  மிகக் கவனமாக அவதானித்தவனுக்கு எதுவோ இப்போது பொறி தட்டியது. பல புதிர்களுக்கு அவை விடை கண்டு பிடிக்கலாம் என எண்ணியவன் உடனடியாக தன் தொலைபேசியில், தொலைக்காட்சியில் காவல் அதிகாரிகள் தந்திருந்த தொலைபேசி எண்ணை பதிவு செய்து, தொடர்புக்காக காத்திருந்தான்.

88888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888

வசந்த காலத்துக்கும் கோடை காலத்துக்கும் இடைப்பட்ட பருவகால நிலை இலை தெரியாமல் மலர்களாக, கொத்து கொத்தாய் வீதியோரத்து மரங்களில் மலர்ந்திருந்தது. அவன் தனது வாகனத்தை தான் போக வேண்டிய வீட்டிலிருந்து மூன்று வீடுகள் தள்ளியே தரித்திருந்தான்.  அவன் அப்படிச் செய்ததற்கும் ஒரு வலுவான காரணமிருந்தது.  தான் தன் கட்டட வேலை ஆரம்பிக்கப் போகும் வீட்டிற்கு ஒன்பது மணிக்கு முன்பாக வரவே கூடாது என்பது அந்த வீட்டு எஜமானி அம்மாவினால் அவனுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகளில் ஒன்று. அவன் தனது சிறு கட்டட வேலைக்கடையிலிருந்து அதிகாலையிலேயே புறப்பட வேண்டியிருந்தது. தன்னுடைய வேலைத்தளத்தின் ஒரு பகுதி இன்னொரு சிறு காரியாலயமாக  இந்த நகரின் ஒரு பகுதியிலேயே அமைந்திருந்தாலும் , இவ்வீட்டின் எஜமானியம்மா அங்கு போகாமல் பல மைல்கள் தொலைவில் இருக்கும் தமது கடைக்கு வந்திருந்தது அவனுக்கு ஏதோ ஒருவித உறுத்தலை மனதில் தோற்றுவித்திருந்தாலும்,  அவள் தனது பயணத்துக்கான எரிபொருள், நேரம், முயற்சி, செலவுகள்  அனைத்துக்கும் சேர்த்து , கேட்டதை விட அதிகமாகவே கொடுத்திருந்தது, அவனது அப்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டதில், பெரிதாக யோசித்து குழம்பும் மனநிலையில் அவனை அதிக நேரம் வைத்திருக்கவில்லை.

 

வாகனத்தின் சாளரங்களை இறக்கி விட்டு, வெளியிலிருந்து வந்து கொண்டிருந்த இதமான காற்றை சுவாசத்தில் இழுத்து விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான். அவனுக்கு தான் போக வேண்டிய வீடு நன்றாகத் தெரிந்ததில், இருந்தாற்போல் அங்கிருந்து புறப்பட்ட வாகனத்தை எதேச்சையாக பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது.  கடந்த வருடத்தில் வந்திருந்த, மிக விலையுயர்ந்த ரோட் ரேஞ்சர் 4x 4, ஒன்று மிக லாவகமாக முற்றத்திலிருந்து வெளியே சீறியது!   இது யாராக இருக்கும் என்ற யோசனை அவனைத் தட்டியெழுப்பியது.  அதில் சாரதியாக இருந்தவள்,  தன்னை கடையில் வந்து பார்த்த பெண் போலவே இருக்கிறாளே, இவள் நான் வேலை தொடங்குவதற்கு இன்னும் இருபது நிமிடங்கள் இருக்கும் போது எங்கே புறப்பட்டுப் போகிறாள் என்ற கேள்வியும் எழுந்தது.  எதற்கும் எனக்குத் தந்த நேரம் வரட்டும், இங்கிருந்து போய் கதவைத் தட்டலாம் என்று தன்னைத் தானே    ஆறுதல் படுத்திக்கொண்டான்.

அவன் போய் கதவைத் தட்டிய போது அவனோடு அவனுக்கான கட்டட வேலை பற்றிப் பேசி முடித்திருந்த பெண் கதவைத் திறந்தாள். முகத்தில் புன்னகையுடன், அதே வேளை ஒரு வித கறாருடன் அவள் அவனுக்கான வேலை நேரத்தைப் பற்றியும் அவன் முடிக்க வேண்டிய வேலை பற்றியும் மிக நுணுக்கமான விபரங்களுடன் தெரிவித்த போது அவன் சிறிது அசந்து தான் போனான்.

அதன் பின் வந்த நாட்களில் அவனுக்கு சில விடயங்கள் ஒரு வித சந்தேகத்தை தந்தாலும்,  தனக்குத் தந்த வேலையான தோட்டத்து கட்டட  வேலையை அவன் சரிவரப் பார்த்துக் கொண்டிருந்ததில் அவனுக்கு மேலதிகமாகச் சிந்திப்பதில் நாட்டம் போகவில்லை. அந்த  அழகான தோட்டம் முழுவதும் செவ்வந்திப் பூக்கள் நிறைந்திருந்தன. எத்தனையோ விதமான மலர்கள் அங்கிருந்தாலும் அவை எல்லாவற்றிக்கும் இடையிடையே செவ்வந்தி ஆக்கிரமிப்பு செய்திருந்தது.  கொத்து கொத்தாய் செவ்வந்தி பூக்கள் மிக நேர்த்தியாய் வேலிக்கரையெங்கும் நிமிர்ந்து நின்றன.  எந்த ஒரு மலர்ச் செடியையும் அவன் கட்டட வேலை பாதிக்காதவாறு அவன் மிக அவதானமாக நடந்து கொண்டான்.

அந்த மலர் வனத்தை ரசித்தபடியே அங்கிருந்த வீட்டுத்தோட்டத்தின் சிறிய கொட்டகையில் (shed)   ஒரு கழிவிடத்தை சகல வசதிகளுடன் அவன் கட்டத் தொடங்கியிருந்தான். ஒரு வாரத்திற்குள்ளாகவே வேலை முடித்தாயிற்று.  அவன் போகும் போதும் வேலை முடித்து திரும்பும் போதும் அந்த வீட்டுக்காரப்  பெண் மாத்திரமே அவன் கண்களுக்குத் தென்படுவாள்.  இந்தப் பெரிய வீட்டில் இவள் மாத்திரம் தானா வசிக்கிறாள், எதற்காக இந்தத் தோட்டத்தில் ஒரு கழிவறை தேவைப்படுகிறது போன்ற கேள்விகள் அவனுக்கு இருந்தாலும் எஜமானியின் சுருக்கமான உரையாடல்கள் அவ்வளவுக்கு அவனுக்கு அவளுடன் பேசக்கூடிய நெருக்கத்தை கொடுத்திருக்கவில்லை.

இருந்தாலும் வேலை முடிவதற்குள் ஒரு சில புன்னைகைகளை அவள் உதிர்த்திருந்தாள்.  அவன் வேலை முடித்த அந்த நாளில் அவள் பெரியதொரு பாரத்தை இறக்கி வைத்தாற் போன்ற ஒரு தோற்றத்தில் இருந்ததைப் போல அவன் உணர்ந்தது ஏன் என்பது அவனுக்கு தெரியவில்லை. அல்லது அது தான் அவள் இயல்பான தோற்றமா  என்பதும் அவனுக்குத் தெரியவில்லை.

இருப்பினும் துரதிஷ்டவசமாக அவன் தன் கட்டட வேலைக்குப் பாவிக்கும் சில கருவிகள் அடங்கிய  ஒரு சிறிய பையை  அந்த கொட்டகையில் (shed)   விட்டு வந்தது ஞாபகத்துக்கு வந்து, அவள் வீட்டுக்கு போன போது, அவனை எதிர்பார்க்காததில் அவளுக்கு ஏற்பட்ட  தடுமாற்றம் அதீதமானதாய் இருப்பதாக அவனுக்குத் தெரிந்தது.

“மன்னிக்க வேணும், என்ர டூல்ஸ் (tools) சிலதை விட்டிட்டன், ஃபோன் (phone ) பண்ணினன் பதில் இல்லை, எனக்கு அவசரம் அந்த டூல்ஸ் தேவை. எடுத்துக் கொண்டு போக வந்தனான்!” அவன் கூறி முடிக்க முன்னரே அவள் தடுமாறினாள்.

 

“சரி, சரி, வேளைக்கு எடுத்துக் கொண்டு போங்கோ. எனக்கு வேலையிருக்கு!” ஒரு வித கோபம் கலந்த வார்த்தைகள்.

அது மட்டுமல்ல அவனுடன் அவளும் தோட்டம் வரை தொடர்ந்து வந்து அவனை தோட்டத்தின் ஒரு மூலையில் நிற்பாட்டினாள்.

 

“நில்லுங்கோ, நான் ஓடிப்போய் எடுத்து வாறன்!” அவள் அவசரம் அவசரமாய் அவன் சொன்ன இடத்திற்கு போனாள்.

 

அவன் அவள் வரும் வரையிலான அந்த சில நிமிடங்களில் வேலியோரத்து செவ்வந்திகளின் செழுமை குன்றி வாடியிருப்பதை அவன் அவதானிக்கத் தவறவில்லை. கொட்டகையோடு இருந்த செவ்வந்திகள் எல்லாம் காய்ந்து இறக்கும் தருவாயில் இருந்தன. யாரோ அவற்றின் மேல் ஏறி நடந்தோ அல்லது தவறுதலாக விழுந்து எழும்பியோ இருந்திருக்க வேண்டும். அவன் அங்கு வேலை செய்த அந்த ஒரு வாரத்தில் அவனோடு உறவாடிய அந்த ரம்மியமான செவ்வந்திகளில் பலதும் ஏதோ ஆடு மாடுகள் ஏறி மிதித்து துவம்சம் பண்ணியது போல நசிந்து, அதன் அடிபக்கத்திலிருந்த மண் கூட களிமண் தரை போன்ற நிலையில் இருக்க, அவள் அவனுடைய கைகளில் அவன் தேடி வந்த பையைத் திணித்து அவனை  வீட்டுக்கு வெளியே தள்ளினாள்.

“எல்லாம் எடுத்தாச்சுத் தானே?”

இனிமேல் இந்தப் பக்கம் வர மாட்டாய் தானே என்ற கேள்வி அதில் தொக்கி நிற்பதாய் உணர்ந்தவன் “எல்லாம் எடுத்தாச்சு!” என்றவாறே சிரித்ததை அவள் அன்று ரசிக்கவில்லை.

88888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888

சாதாரண உடையில் சத்தமின்றி வந்து நின்ற காவல் அதிகாரிகள் (Police officers)     மாதவி வீட்டைத் தட்டி,  அவள் திறந்த போது, அவள் முகத்தில் தோன்றியது பயமா, ஆச்சர்யமா என்பதை அதைத் தொடர்ந்து வந்த நிமிடங்கள் சாட்சியமாக்கின. முன்னரும் அவர்கள் வந்து, அவளுடன் பேசி பல தகவல்களைப் பெற்றுப் போயிருந்தார்கள். ஆனால் இம்முறை அவர்கள் அவளை நேரடியாக அவர்கள் வீட்டுத் தோட்டத்திற்கு வரும்படி அழைத்தபோது அவள் நடக்க முடியாது ஸ்தம்பித்துப் போனாள்.  அவர்கள் அவளை அந்த சிறிய கொட்டகையைத் (shed)  திறக்கச் சொன்ன போது, இனியும் மறுப்பதோ மறைப்பதோ முடியாத காரியம் என்பதை அவள் புரிந்து கொண்டு, திறந்த போது, அங்கே சாருமதி வாய் கட்டப்பட்ட நிலையில் பாதி மயக்கத்தில் இருந்தாள்.  அவள் ஒரு கதிரையில் வைத்துக் கட்டப்பட்டிருந்தாள். அவள் வாய் கட்டப்பட்டிருந்தாலும் அவளுக்குத் தேவையான உணவு, நீர் என்பன அவ்வப்போது  கொடுக்கப் பட்டதற்கு ஆதாரமாக, சாருமதியிருந்த கதிரைக்குப் பக்கத்தில் எஞ்சிய உணவுகளோடு உணவுத் தட்டங்களும் நீர்குவளைகளும் பரப்பி வைக்கப்பட்டிருக்க, அந்தச் சிறிய கொட்டகையின் ஒரு பக்கத்தில் ஒரு புதிதாகக் கட்டப்பட்ட கழிப்பறையும் இருந்தது.

Leave A Reply

Your email address will not be published.