ரிஷாத்தை நாடாளுமன்றத்துக்கு அனுமதிக்க நடவடிக்கை எடுங்கள்! – சி.ஐ.டிக்கு படைக்கல சேவிதர் எழுத்து மூலம் அறிவிப்பு.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழே கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டுவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தால் அவரை நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் ஆலோசனைக்கு அமைய இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 04 ,05 ஆம் திகதிகளில் முற்பகல் 10 மணிக்கு நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது எனவும், இதற்கமைய முற்பகல் 9.30 மணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் சூழல் காரணமாக சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றி ரிஷாத் பதியுதீனை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வருமாறும் நரேந்திர பெர்னாண்டோவால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.