கொரோனாவின் தீவிரத்தையடுத்து பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மேலதிக வகுப்புகளுக்கும் தடை.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புக்கள் ஆகியவற்றை மீள் அறிவித்தல் விடுக்கப்படும் வரை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஹோட்டல்களில் கூட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்களை நடத்துவதற்கு அனுமதி கிடையாது எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, எதிர்வரும் வெசாக் பூரணை தினம் மற்றும் ரமழான் கொண்டாட்டங்களை மக்கள் தமது வீடுகளில் இருந்தவாறே கொண்டாடுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், மேற்படி தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும்
தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.