அமெரிக்கா மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் வடகொரியா பகிரங்க எச்சரிக்கை.

அமெரிக்கா தனது விரோத கொள்கையை மாற்றிக் கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் அந்த நாடு மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் வடகொரியா தொடர்பிலும் அதன் அணுதிட்டம் குறித்தும் தகவல் வெளியிட தயார் என தெரிவித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே வடகொரியா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்த விடயத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் நிர்வாகம் எதிர்ப்பு கொள்கையை முன்னெடுப்பதாக வடகொரிய வெளிவிவகாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

வடகொரியாவின் அணு ஆயுதத் திட்டம் சர்வதேசத்தின் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

மேலும் வடகொரியாவின் செயல்பாடுகள் குறித்து தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்களுடன் அமெரிக்கா விரைவில் கலந்துரையாட உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் வடகொரியா விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதியால் வடகொரியா குறித்து வெளியிட்டுள்ள தகவல்கள் சகிக்க முடியாததும் பாரிய தவறானதுமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.