வடக்கில் மேலும் 25 பேருக்குக் கொரோனா!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 14 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 25 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 460 பேரின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 14 பேரும், வவுனியா மாவட்டத்தில் 7 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் மூவரும், மன்னாரில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 5 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உள்ளது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற இருவருக்கும் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 5 பேரும், தெல்லிப்பழை வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் ஒருவரும், ஊர்காவற்றுறை வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதேவேளை, கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்குச் சென்ற இருவருக்கும், பளை வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கும், வவுனியா குருக்கள் புதுக்குளம் பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அந்தக் கிராமத்தில் தொற்றாளர்களுடன் முதல்நிலை தொடர்புடைய ஐவருக்கும், வவுனியா பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட இருவருக்கும், மன்னார் பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்குச் சிகிச்சைக்குச் சென்ற ஒருவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.