முள்ளிவாய்க்கால் சின்னத்தை இராணுவம் இடிக்கவே இல்லை இப்படிக் கூறுகின்றார் சவேந்திர சில்வா.

“முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இராணுவத்தினர் இடித்தழித்தாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மறுக்கின்றேன்.”

இவ்வாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தில், நினைவுச் சின்னம் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு இராணுவமே பொறுப்பு என்று தெரிவிக்கப்படுகின்றதே என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நீங்கள் சொல்வதைப் போன்று நினைவுச் சின்னம் சேதப்படுத்தப்பட்டதற்கும் இராணுவத்தினருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இராணுவத்தினர் மீது எழுந்தமானமாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கமுடியாது.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தீவிரமடைந்துள்ளதால் நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறையில் உள்ளது. பயணக் கட்டுப்பாடுகளும் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்தநிலையில், இறந்தவர்களின் ஆன்மாக்களை வைத்து அரசியல் செய்வதை வடக்கு, கிழக்கு மதகுருமாரும் தமிழ் அரசியல்வாதிகளும் உடன் நிறுத்தவேண்டும். இறந்தவர்களை அஞ்சலிக்கவேண்டும் என்றால் வீடுகளிலிருந்து அஞ்சலியுங்கள்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.