இலங்கையின் இராணுவ மயமாக்கல்; நிலைமை படுமோசம் – ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் கவலை

“இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இராணுவ மயமாக்கல் தொடர்கின்றது. இந்தப் படுமோசமான நிலைமை மிகவும் கவலையளிக்கின்றது.”

– இவ்வாறு அமைதியான முறையில் ஒன்றுகூடும் சுதந்திரத்துக்கான உரிமைகள் குறித்த ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் கிளமென்ற் யலேஷொஷி வூலே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கைக்கான எனது விஜயம் இடம்பெற்று ஒரு வருடத்தின் பின்னரும், ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்ற ஆறு மாத காலத்துக்குப் பின்னரும் நான் விஜயம் மேற்கொண்ட வேளை பார்த்த சூழமைவு தற்போது மாற்றமடைந்துள்ளது. இது குறித்து நான் மிகவும் கவலையடைந்துள்ளேன். இலங்கையின் எதிர்காலம் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளேன்.

நான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தவேளை அரசசார்பற்ற அமைப்புகளின் செயலகம் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டிலிருந்து வேறு அமைச்சுக்கு மாற்றப்பட்டிருந்தது. எனினும், கடந்த வருடம் டிசம்பர் 10ஆம் திகதி அரசசார்பற்ற அமைப்புகளின் செயலகம் மீண்டும் பாதுகாப்பு அமைச்சின் வசம் சென்றுள்ளது.

இந்தநிலையில், இலங்கையில் அரசசார்பற்ற அமைப்புகளுக்கான செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்படாத அரசசார்பற்ற அமைப்புகளை சட்டவிரோதமானவை எனப் பாதுகாப்பு அமைச்சு அறிவிக்கவேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இவ்வருடம் பெப்ரவரியில் கொழும்பில் ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கான இடமொன்று உருவாக்கப்பட்டதுடன். இதுவே ஆர்ப்பாட்டம் செய்வதற்கான இடமாக அறிவிக்கப்பட்டதுடன் ஏனைய இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது, நாளாந்த வாழ்க்கைக்குப் பாதிப்பு ஏற்படுவதைக் குறைப்பது ஆகிய காரணங்களைக் காட்டி சில தரப்பினர் இதனை வரவேற்றிருக்கலாம். ஆனால், அமைதியாக ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் செய்வதற்காக அரசையும் பொதுமக்களையும் ஈர்ப்பதற்காகப் பொது இடங்களே பயன்படுத்தப்படுகின்றன. இதன்காரணமாக பேச்சுகள், சகிப்புத்தன்மை, பரந்த மனப்பான்மை போன்றவை உருவாகின்றன.

ஆர்ப்பாட்டங்கள் பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்ற அடிப்படையில் அவற்றைக் கட்டுப்படுத்துவது ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கான நோக்கத்துக்கு முரணானது.

இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் சிவில் சமூகப் பிரதிநிதிகளைக் கண்காணிப்பது, துன்புறுத்துவது, விசாரிப்பது, அச்சுறுத்துவது அதிகரித்துள்ளன என்று எனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடருக்குச் சென்று திரும்பிய சிவில் சமூகப் பிரதிநிதிகள் பழிவாங்கப்படும் நடவடிக்கைளும் இடம்பெறுகின்றன.

இலங்கைக்கு கடந்த வருடம் நான் விஜயம் மேற்கொண்டிருந்தவேளை ஜனநாயக மயப்படுத்தல், நல்லாட்சி, போருக்குப் பிந்தைய நல்லிணக்கம், நிலைமாறுகால நீதி தொடர்பில் சில முக்கிய விடயங்கள் சாதிக்கப்பட்டிருந்தன. ஆனால், தற்போதைய ஆட்சியில் இந்த விடயங்கள் தொடர்பில் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் இலங்கையில் முன்னேற்றம் காணப்படவில்லை.

சில பகுதிகள் தொடர்ந்தும் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளன. இது மக்களின் சுதந்திர நடமாட்டத்துக்குத் தடையாகவுள்ளது” – என்றார்.

Comments are closed.