எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தைச் சந்தித்த இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி -பிராந்திய உறவுகள் குறித்து முக்கிய கவனம்.
கொழும்புக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்தியாவின் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இரு தரப்புக்கும் இடையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, பிரதானமாகப் பிராந்திய அபிவிருத்தி மற்றும் இலங்கை – இந்தியா இடையிலான நீண்டகால விசேட உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்வது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், இரு நாடுகளின் பரஸ்பர நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்கும் பிராந்திய ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் தொடர்ச்சியான தொடர்புகளும் நெருங்கிய ஒத்துழைப்பும் அவசியமானது என்பதை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
மேலும், வர்த்தகம், முதலீடுகள், தொழில்நுட்பம், அபிவிருத்தி ஒத்துழைப்புகள் மற்றும் மக்களுக்கிடையேயான தொடர்புகள் உள்ளிட்ட பரந்த அளவிலான துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
