கிராம அலுவலகரும் மனைவியும் யானை தாக்கியே பரிதாபச் சாவு! – மரண விசாரணையில் தெரிவிப்பு

கிளிநொச்சி, பூநகரி – ஜெயபுரத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நிர்வாகக் கிராம அலுவலகரும் அவரது மனைவியும் யானை தாக்கியதிலேயே உயிரிழந்துள்ளனர் என்று மரண விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் துயரச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது. சம்பவத்தில் நயினாதீவைப் பிறப்பிடமாகவும் முழங்காவிலை வசிப்பிடமாகவும் கொண்ட பூநகரி பிரதேச செயலக நிர்வாகக் கிராம அலுவலகர் பாலசிங்கம் நகுலேஸ்வரன் (வயது – 52) மற்றும் அவரது மனைவி சுனித்தா (வயது – 50) ஆகிய இருவருமே உயிரிழந்தனர்.

கிராம அலுவலகர் சம்பவ இடத்திலும், அவரது மனைவி கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலும் உயிரிழந்தனர்.

கிராம அலுவலகரின் மனைவியின் மரண விசாரணை மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று நடைபெற்றது.

யானை தாக்கியதற்கான அடையாளங்கள் அவரின் உடலில் காணப்பட்டன என்று திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னிலையில் இடம்பெற்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.