தடுப்பூசிகளால் மாத்திரம் கொரோனாவை இல்லாதொழிக்க முடியாது! – சுகாதார அமைச்சர் பவித்ரா கூறுகின்றார்.

“கொரோனா வைரஸின் பாதிப்பிலிருந்து நாட்டு மக்கள் அனைவரையும் காப்பாறுவதே அரசின் திட்டம். அதற்காகவே தடுப்பூசிகளைப் பல நாடுகளிலிருந்து கொள்வனவு செய்கின்றோம். தடுப்பூசி வழங்கல் நடவடிக்கையில் வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற வேறுபாடு கிடையாது.”

இவ்வாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டின் நான்கு திசைகளிலும் வாழும் அனைத்து மக்களுக்கும் கொரோனாத் தடுப்பூசிகள் ஏற்றப்படும்.

இதேவேளை, பி.சி.ஆர். பரிசோதனைகள் வடக்கில் போதாமல் இருப்பது உண்மைதான். எனினும், இங்கு பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

கொரோனாத் தடுப்பு தேசிய செயலணிக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண மக்கள் தொடர்பில் அரசு அதிவிசேட கவனம் செலுத்தியுள்ளது. ஏனெனில் இங்கும் நாள்தோறும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். தனிமைப்படுத்தல் நடவடிக்கையும் இங்கு பரவலாக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிகளால் மாத்திரம் கொரோனாவை முற்றாக இல்லாதொழிக்க முடியாது. மக்கள் அனைவரும் சுகாதார விதிமுறைகளை ஒழுங்காகக் கடைப்பிடித்தால் கொரோனாவை விரைவில் ஒழிக்க முடியும்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.