சசிகலாவின் பேச்சை ஒருத்தர் கூட கேட்கமாட்டார்கள்! ஆடியோ வைரலுக்கு பின் அதிமுக-வின் முக்கிய புள்ளிவிட்ட சவால்

சசிகலா தொண்டர் ஒருவரிடம் பேசிய ஆடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி சசிகலாவின் பேச்சுக்கு ஒருவர் கூட செவிசாய்க்கமாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கு காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, சமீபத்தில் விடுதலையாகி தமிழகம் திரும்பினார். தமிழகம் திரும்பிய இவர், திடீரென்று தான் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார்.

அதன் பின் இவர் இல்லாமல் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட அதிமுக தோல்வியடைந்தது. இந்நிலையில், சசிகலா, தன்னுடைய ஆதரவாளர் ஒருவரிடம் பேசிய ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

அதில், நான் விரைவில் வந்துவிடுவேன், கட்சியைக் காப்பாத்திவிடலாம் என்று சசிகலா பேசியிருந்தார். ஆனால், இது உண்மை தானா? யாரேனும் சசிகலா குரலில் இப்படி பேசி ஏமாற்றுகிறார்களா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், அது உண்மை தான என அந்த ஆடியோவில் பேசியதாக கூறப்படும் வினோத் சுரேஷ் என்பவர் கூறினார்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் நிருபர்களிடம் பேசிய அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி, சசிகலாவின் பேச்சுக்கு ஒரு அ.தி.மு.க தொண்டர் கூட செவி சாய்க்க மாட்டார்.

அ.தி.மு.க.வை திசைதிருப்பி தொண்டர்களைக் குழப்ப சசிகலா முயற்சி செய்கிறார். அவரது எண்ணம் ஈடேறாது, ஒரு தொண்டரும் சசிகலாவிடம் பேசவில்லை. மாறாக, சசிகலா தான் அவர்களிடம் பேசி வருகிறார்.

சசிகலா பேசும் நபர்கள் அ.ம.மு.கவைச் சேர்ந்தவர்கள். ஜெயலலிதா ஆன்மா சாந்தியடையவாவது சசிகலா குடும்பம் அ.தி.மு.க.வில் இருந்து விலகி இருக்க வேண்டும் என கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.